ரஜினியின் ‘அண்ணாத்த’ முழுகதையும் இணைய தளத்தில் கசிந்துள்ளது

ரஜினியின் ‘அண்ணாத்த’ முழுகதையும் இணைய தளத்தில் கசிந்துள்ளது என பரபரப்பு கிளம்பியுள்ளது.

ரஜினிகாந்த், நயன்தாரா, குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ் ஆகியோர் நடிக்கும் அண்ணாத்த படப்பிடிப்பு கொரோனாவால் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது. அண்ணாத்த படம் கைவிடப்பட்டு விட்டதாகவும் ரஜினிகாந்த் வாங்கிய சம்பளத்தை திருப்பி கொடுத்து விட்டதாகவும் வெளியான தகவலை படக்குழுவினர் மறுத்தனர்.

இந்த நிலையில் அண்ணாத்த படத்தின் முழு கதையும் கசிந்து விட்டதாக இணைய தளத்தில் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. அண்ணாத்த கதை என்று பரவும் தகவலில் கீழ்க்கண்ட விவரங்கள் இடம்பெற்றுள்ளன. ரஜினிக்கு குஷ்பு, மீனா இருவரும் அத்தை மகள்கள். ரஜினியை திருமணம் செய்து கொள்ள அவர்களுக்குள் போட்டியே நடக்கிறது. ஒருவரை மணந்தால் மற்றவர் மனம் உடைந்து போவார் என்று கருதி அவர்களை மணக்காமல் வேறு பெண்ணை ரஜினி திருமணம் செய்து கொள்கிறார்.

அந்த பெண் மூலம் பிறக்கும் மகள்தான் கீர்த்தி சுரேஷ். தங்கள் மகன்களுக்கு கீர்த்தி சுரேஷை திருமணம் செய்து வைத்து விடவேண்டும் என்று குஷ்பு, மீனா இடையே மீண்டும் போட்டி வருகிறது. இந்த நிலையில் பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட வில்லன்களுடன் ரஜினிக்கு மோதல் வருகிறது. ஒரு பிரச்சினையில் ரஜினியை அவர்கள் சிக்க வைக்கின்றனர். ரஜினியை காப்பாற்ற நயன்தாரா வக்கீலாக வருகிறார். கீர்த்தி சுரேஷை மணப்பவர் யார் என்பது கிளைமாக்ஸ் என்கிறது இணைய தள தகவல். இதுதான் அண்ணாத்த கதையா? அல்லது போலி கதையா என்பதை படக்குழுவினர் உறுதிப்படுத்தவில்லை.

Related posts