காதலனை பழிவாங்க ஒரு டன் வெங்காயம் அனுப்பி வைத்த காதலி

காதல் தோல்வி : ”நான் மூன்று நாட்கள் அழுதேன், இப்போது உன்னுடைய முறை” காதலனை பழிவாங்க ஒரு டன் வெங்காயத்தை காதலி அனுப்பி வைத்து உள்ளார்.
சீனாவில் நாளை மே 20 ந்தேதி காதலர் தினம் கொண்டாடப்படுகிறது

தன்னை ஏமாற்றிய தன் முன்னாள் காதலன் தன்னைப்போலவே அழு வேண்டும் என்பதற்காக அவர் வீட்டுக்கு 1000 கிலோ வெங்காயத்தை அனுப்பி வைத்தார் ஒரு இளம்பெண்.

சீனா ஷாண்டோங் மாநிலம் ஜிபோ பகுதியை சேர்ந்த பெண் ஜாவோ நீண்ட நாட்களாக ஒருவரை காதலித்து வந்தார். தனது காதலனுடன் காதலர் தினத்தை கொண்டாட மிகுந்த எதிர்பார்ப்பில் இருந்தார்.

ஆனால் அவரது காதலர் அவரை ஏமாற்றி விட்டார். காதலரை பிரிந்தபோது மூன்று நாட்களாக கண்ணீர் விட்டு அழுது உள்ளார்.

இந்த நிலையில், காதலர் இந்த பிரிவுக்கு வேதனை படவில்லை என்பது தெரியவர, ஜாவோவுக்கு கடும் கோபம் ஏற்பட்டது.

உடனே 1000 கிலோ வெங்காயத்தை ஆர்டர் செய்து அதனை தன் முன்னாள் காதலர் வீட்டுக்கு அனுப்பிவைத்தார்.அதில் ஒரு கடிதத்தையும் இணைத்திருந்தார் அவர். அந்த கடிதத்தில், நான் மூன்று நாட்கள் அழுதேன், இப்போது உன்னுடைய முறை என்று எழுதப்பட்டிருந்தது.

ஜாவோவின் காதலர் வெங்காயத்தைப் பார்த்து திகைத்துப்போய் நிற்கும் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. அத்துடன் வெளியாகியுள்ள வீடியோ ஒன்றில், 1000 கிலோ வெங்காயத்தை ஜாவோவின் முன்னாள் காதலன் வீட்டுக்கு டிரக் ஒன்று டெலிவரி செய்வதையும் காணமுடிகிறது.

ஜாவோவின் முன்னாள் காதலன் தனது முன்னாள் காதலியை வித்தியாசமானவ்ர் என்று கூறினாலும், நான் அழாததற்காக நான் ஒரு மோசமான மனிதனா? என கேள்வி எழுப்பி உள்ளார்.

காதலரின் அக்கம் பக்கத்தினர் அவரது வீட்டில் வெங்காய துர்நாற்றம் வீசுவதாகக் கூறி உள்ளனர்.

Related posts