ஊரடங்கில் வெளியே சுற்றித்திரிந்த இந்தி நடிகை பூனம் பாண்டே கைது

மும்பையில் காரில் சுற்றித்திரிந்த இந்தி நடிகை பூனம் பாண்டே மற்றும் அவரது நண்பரை போலீசார் கைது செய்தனர்.

இந்தி நடிகை பூனம் பாண்டே சர்ச்சைகளுக்கு பெயர் போனவர். இவர், இந்தியா கிரிக்கெட் போட்டியில் உலகக் கோப்பையை வென்றால் நிர்வாணமாக ஓடுவேன் என கூறி சர்ச்சையை ஏற்படுத்தினார்.

அமித் சக்சேனா இயக்கிய நாஷா, எ ஜர்னி ஆஃப் கர்மா ஆகிய இந்தி படங்களில் நடித்துள்ள இவர், தெலுங்கு கன்னடத்திலும் நடித்துள்ளார்.

இந்தநிலையில், தற்போது நாடு முழுவதும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனை மீறி அநாவசியமாக வெளியில் சுற்றுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் பூனம் பாண்டே நேற்று ஞாயிற்றுக்கிழமை தனது ஆண் நண்பரான ஷாம் அகமதுடன் மும்பை மெரைன் ட்ரைவ் சாலையில் காரில் சென்றுள்ளார். எந்தவித காரணமும் இல்லாமல் வெளியில் சுற்றித்திரிந்த இருவரையும் மெரைன் ட்ரைவ் போலீசார் கைது செய்தனர். பின்னர் போலீசார் எச்சரித்து விடுவிக்கப்பட்டனர். மேலும் அவர்கள் பாந்த்ராவிலிருந்து மரைன் டிரைவ் வரை பயணித்ததாகத் தெரிகிறது. அவரது கார் இன்னும் போலீசாரின் வசம் உள்ளது.

இவர்கள் மீது சட்டத்தை மதிக்காதது, ஊரடங்கினை மீறி நோய் பரப்பும் நோக்கத்துடன் வெளியே சுற்றித்திரிந்தது, பொறுப்பில்லாமல் நடந்துகொண்டது என பல்வேறு பிரிவுகளில் இவர்கள் மீது போலீசார் வழக்கு தொடர்ந்துள்ளதாக கூறப்படுகிறது.

Related posts