உலக சாதனை படைத்த ‘ராமாயணம்’ தொடர்

தூர்தர்ஷன் தொலைக்காட்சியில் 33 ஆண்டுகளுக்குப் பின் மறு ஒளிபரப்பாகி வரும் ராமாயணம் தொடர் உலகில் அதிகம் பேர் பார்த்த நிகழ்ச்சி என்ற புதிய உலக சாதனையை படைத்துள்ளது.

ராமானந்த் சாகர் தயாரிப்பில் உருவான ராமாயணம் தொடர், 1987-ம்ஆண்டில் தூர்தர்ஷனில் ஞாயிற்றுக்கிழமைகளில் வாரந்தோறும் ஒளிபரப்பானது. இதில் இந்தி நடிகர் அருண் கோவில் ராமர் வேடத்திலும் நடிகை தீபிகா சீதையாகவும் குத்துச் சண்டை வீரர் தாரா சிங் அனுமனாகவும் நடித்திருந்தனர். அப்போதே, நாடு முழுவதும் கோடிக் கணக்கானோர் இந்தத் தொடரை பார்த்தனர். இப்போது, ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், வீட்டில் இருக்கும் மக்கள் பார்க்க வசதியாக தூர்தர்ஷன் தொலைக்காட்சி ராமாயணம் தொடரை 33 ஆண்டுகளுக்குப் பின் கடந்த மார்ச் 28-ம் தேதி முதல் மறு ஒளிபரப்பு செய்கிறது.

ராமாயணம் தொடர் முதலில் ஒளிபரப்பானபோது பெற்ற வரவேற்பை போலவே இப்போதும் மக்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது. கோடிக்கணக்கான மக்கள் இத்தொடரை ரசித்து பார்த்து வருகின்றனர். குறிப்பாக, கடந்த ஏப்ரல் 16-ம் தேதி ஒளிபரப்பான பகுதியை மொத்தம் 7.7 கோடி பேர் பார்த்துள்ளனர். இதன் மூலம் உலகிலேயே அதிகம் பேரால் பார்க்கப்பட்ட தொலைக்காட்சி பொழுதுபோக்கு நிகழ்ச்சி என்ற உலக சாதனையை ராமாயணம் தொடர் படைத்துள்ளது. இத்தகவலை தூர்தர்ஷன் ட்விட்டரில் தெரிவித்துள்ளது.

Related posts