“விஷாலை சும்மா விடமாட்டேன்” டைரக்டர் மிஷ்கின் ஆவேசம்

விஷால் நடிக்கும் துப்பறிவாளன்-2 படத்தை மிஷ்கின் இயக்கினார். படம் பாதி முடிந்த நிலையில் ரூ.5 கோடி சம்பளம் உள்பட பல்வேறு நிபந்தனைகளை மிஷ்கின் விதித்ததாக கூறி, அவரை நீக்கிவிட்டு விஷாலே படத்தை இயக்குகிறார்.

இந்த நிலையில் சென்னையில் பூர்ணா நடித்த ‘கண்ணாமூச்சி’ வெப் தொடர் அறிமுக நிகழ்ச்சியில் மிஷ்கின் கலந்து கொண்டு பேசியதாவது:-

“விஷாலை வைத்து எடுத்த துப்பறிவாளன் படம் பெரிய வெற்றி பெற்றது. அந்த படத்தில் 4 நாட்கள் எடுக்க வேண்டிய சண்டை காட்சியை 6 மணிநேரத்தில் எடுத்தேன். துப்பறிவாளன் இரண்டாம் பாகத்துக்கான கதையை எழுத சொன்னார். எழுதினேன். அந்த கதை சிறப்பாக வந்துள்ளதாக என்னை பாராட்டினார். நானே படத்தை தயாரிக்கிறேன் என்றும் கூறினார். அப்போதுதான் பிரச்சினை ஆரம்பித்தது.

இந்த கதை தயாராக ரூ.35 லட்சம் செலவு செய்ததாக விஷால் தெரிவித்துள்ளார். இதை ஆதாரத்துடன் அவர் நிரூபிக்க தயாரா? 32 நாட்கள் படப்பிடிப்பு நடந்துள்ளது. ஒரு நாளைக்கு ரூ.15 லட்சம் செலவு செய்தேன் என்று கூறியுள்ளார். அதன்படி 32 நாட்களுக்கு ரூ.4 கோடியே 50 லட்சம்தான் ஆகி இருக்கும். ஆனால் ரூ.13 கோடி செலவு செய்து இருப்பதாக தெரிவித்துள்ளார். அவர் சொல்வதில் உண்மை இல்லை.

விஷாலை ஒரு சகோதரனாக பார்த்தேன். ஆனால் எனக்கு துரோகம் செய்தார். எனது தாயை மோசமாக திட்டினார். தயாரிப்பாளர்கள் எனக்கு படம் கொடுக்கக் கூடாது என்று கூறியுள்ளார். சினிமா இல்லாவிட்டாலும், எங்கேயாவது உழைத்து என்னால் பிழைக்க முடியும். யாரிடமும் பிச்சை எடுக்க மாட்டேன். இனிமேல் விஷாலை சும்மா விடப்போவது இல்லை”

Related posts