உன்னதத்தின் ஆறுதல்! வாரம் 20. 11

தபசுகால சிந்தனை. 3
தேவ பாரமரிப்பும் மனிதன் கைவிடப்படலும்.
சகோதரன். பிரான்ஸ்சீஸ் அந்தோனிப்பிள்ளை.
ரெகொபோத் ஊழியங்கள் – டென்மார்க்கிற்காக பிரார்த்திப்போம்.

என்தேவனே, என்தேவனே ஏன் என்னைக் கைவிட்டீர்? மத்தேயு 27:46. சங்.22.1

பழைய ஏற்பாட்டுக்காலத்திலும், அதாவது கிறிஸ்துவுக்கு முன்னும், புதி;ய ஏற்பாட்பாட்டுக் காலத்திலும், அதாவது தற்போதைய காலத்திலும் இஸ்ரவேல் ஜனங்கள் தாம் வேதனையை அல்லது, துன்ப துயரங்களை அனுபவிக்கும் போதும் தேவனை நோக்கி ஏறெடுக்கும் ஓர் வேதப்பகுதி சங்கீதம் 22 ஆகும். (வேதப்பத்தகம் உள்ளவர்கள் இந்த 31 வார்த்தைகளையும் வாசிக்கவும்).

காரணம் இந்த தேவதப்பகுதியில் மட்டுந்தான் தேவனால் கைவிடப்படும்போது ஏற்படும் பரிதாபமான நிலையை உணரமுடியும். இஸ்ரவேலர் தேவனேடு வாழும் போது அவர் அவர்களை சகல இக்கட்டுக்களுக்கும் நீங்கலாக்கி காத்து வழி நடத்தி வந்தார். அவர்கள் தேவனை விட்டு வழிவிலகி நடந்தபோது, அதாவது தேவ கட்டளைகளை மறந்து தமது சுயவிருப்;பத்திற்கு ஏற்பவாழ்ந்தபோது மிகுந்த துயரங்களை அனுபவித்து வந்தனர். அந்த வேளைகளில் அவர்கள் மீண்டும் தேவனைநோக்கி கதறி தம்மை மீட்கும்படியாக விண்ணப்பிப்பார்கள். தேவன் அவர்களின் விண்ணப்பத்தைக் கேட்டு அவர்களின் இடுக்கண்களில் இருந்து அவர்களை விடுவிப்பார். இது அவர்களின் வாழ்கையில் ஓர் உன்னதமான நினைவாகும்.

இயேசுகிறிஸ்துவும் பிதாவாகிய தேவனோடு எப்போதும் தொடர்புடையவராக வாழ்ந்து வந்தார். ஆனால் சிலுவையில் உலகத்தின் பாவங்களுக்காக அறையப்பட்ட போது மட்டுந்தான் பிதாவாகிய தேவனின் பிரசன்னத்தை இழந்தார். காரணம் உலகத்தின் பாவங்களைப் போக்கும் பாவநிவாரணப் பலியாக அவர் சிலுவையில் காணப்பட்டார். வேதம் மிகத்தெளிவாக கூறுகிறது பிதாவாகிய தேவன் பரிசுத்தர் என்று. பாவத்தை வெறுத்து பரிசுத்தத்தை விரும்புகிற தேவன் என்று. லேவியராகமம் 11:45.

இவ்வாறு பரிசுத்தத்தை விரும்பும் தேவன், உலகத்தின் பாவங்கள், சிலுவையில் தொங்கிய இயேசுவின்மேல் இருந்ததனால் தன்னை மறைத்துக் கொண்டார். அதை உணர்ந்த இயேசு, ஒன்பதாம்மணி நேரத்தில் இயேசு, ஏலி! ஏலி! லாமா சபக்தானி, என்று மிகுந்த சத்தமிட்டுக் கூப்பிட்டார்@ அதற்கு என் தேவனே! என் தேவனே! ஏன் என்னைக் கைவிட்டீர் என்று அர்த்தமாம். மத்தேயு 27:46. இப்போது உணர்ந்திருப்பீர்கள் பாவம் எவ்வளவு கொடியது என்று. அதுமட்டுமல்ல பாவம் தேவனுடனான தொடர்பை முற்றுமுழுக்க வேறுபிரிக்கிறது என்று. உலகத்தின் பாவங்களால் பாவமாக்கப்பட்ட இயேசுவுக்கும் பரிசுத்த தேவனுக்கும் இடையிலான உறவு துண்டிக்கப்பட்ட வேதனையிலே மொழியும் இவ்வார்த்தைகள் அவரின் வேதனையின் ஓலங்கள்.

அன்று ஆபிரகாம் தனது மகன் ஈசாக்கை பலியிட மூன்று நாட்கள் நடையாகச் சென்றபோது தனது உள்ளத்தில் சுமந்து சென்ற துயரச்சுமை, பலியிடத் தன் கத்தியை ஓங்கியவேளை உள்ளத்தில் வெடித்துச்சிதறிய வேதனைக்கனல்கள். அவை வார்த்தையால் வெளிப்படுத்தக் கூடியவை அல்ல. (ஆதியாகமம் 22:1-14) ஈசாக் பலிபீடத்தில் ஒரு வார்த்தையும் கூறவில்லை. ஆனால் இங்கே இயேசுவின் ஏன் என்னைக் கைவிட்டீர் என்ற கதறல் பிதாவின் இதயத்தை சுக்குநூறாக்கி இருக்கும். தேவன் மனிதர்மீது கொண்டஅன்பு எத்தனை ஆழமானது என்றால், அவர் தம் ஒரேபேறான குமாரனாகிய இயேசுவை எமக்காக பலியாக ஒப்புக்கொடுக்கும் அளவிற்கு ஆழமானது. இத்தனையும் பாவத்தால் அடிமைப்பட்டிருந்த பாவிகளாகிய எம்மை மீட்ப்பதற்காகவே.

இன்று உலகில் கைவிடப்படுதல் பல வகையிலான சூழ்நிலைகளில் அமைவதை நாம் காணக்கூடியதாக உள்ளது. கணவன் மனைவி மத்தியில். பெற்றோர் பிள்ளைகள் மத்தியில். சமுதாய உறவின் மத்தியில். கிராமங்கள், நகரங்கள், தேசங்கள் மத்தியில். போர் யுத்தங்கள் மத்தியில். இயற்கை அழிவுகள் மத்தியில். ஆனால் எந்தச் சூழ்நிலைகளும் காரணமாகமல், முற்று முழுவதுமாக பிதாவின் சித்தத்தை செய்யவென்றே சிலுவை மரத்தில் கைவிடப்பட்டு ஆண்டவர் இயேசு தொங்கினாரே. நம்மை மீட்ப்பதற்காக அவர் பிதாவினாலே ஒருகணம் கைவிடப்பட்டவராக தொங்கினாரே.

பாவத்தைப்போக்க வந்த இயேசுவிற்கு இலகுவான பலவழிகள் இருந்தன. ஆனால் அவரோ பாவத்திற்கு வித்திட்ட கீழ்படிதலைக் கற்றுக்கௌ;ளும் வழியையே தெரிந் தெடுத்தார். தம்மை மரணத்திற்கு ஊற்றிவிடவென்றே வந்தவர், மரணம் நெருங்கிய போது மனுசீகத்தில் கலங்கினார். இந்தப்பாத்திரம் என்னை விட்டு நீங்கக்கூடுமானால் நீங்கட்டும் என்று வேண்டினார். அத்தனை தூரம் அவர் வியாகுலப்பட பிதாவாகிய தேவன் அனுமதித்தார். ஏன்? மனிதகுலம் விழுந்துபோக காரணமாக இருந்த கீழ்ப்படியாமையின் இடத்தில் இயேசுவை நிறுத்தி, மனுக்குலத்தை இரட்சிக்க சித்தமானார். ஏதேனிலே மனிதன் தன்இஸ்டம்போல் நடந்து பாவத்தை சுதந்தரித்தான். இந்தப்பாவத்தில் இருந்து வெளிவரவேண்டுமானால் தன் இஸ்டம்போல் நடக்க முடியாத இக்கட்டு மனிதனுக்கு அவசியமாயிற்று. இயேசுவும் தன் இஸ்டம்போல் அல்ல, பிதாவின் சித்தத்தையே நிறைவேற்றும்படியாக உலகிற்கு வந்தார். சுயமாக ஜீவனைப்பெற மனிதன் எடுத்த வழியிலே தேவனுக்கு கீழ்ப்படியாமற் போனான். ஆனால் பிதாவாகிய தேவன் பாடுகளின் வழியிலே நித்திய ஜீவனைப்பெற முடியும் என்று இயேசுவின் மூலம் முழுஉலகிற்கும் வெளிப்படுத்தினார்.

பிரியமான தேவபிள்ளைகளே, இன்று உணர்ந்திருப்பீர்கள் பிதாவாகிய தேவன் ஏன் இயேசுவை சிலுவையில் தொங்கிய வேளையில் கைவிட்டார்? என்று. மனிதகுலத்தின் பாவத்தின் ஆணிவேரை அறுத்தெறிந்து, பாவத்தின் சம்பளமாகிய மரணத்தில் இருந்து மனிதகுலம் விடுதலையை அடையும்படியாக அவரை சிலுவையில் கைவிட்டார். இந்த உண்மையின் வெளிப்பாடு உன்னுடைய உள்ளத்தில் இன்றிலிருந்து கிரியை செய்யட்டும். தேவனுக்கு கீழ்ப்படிவதன் மூலம் பாவத்தை வெறுத்து, தேவன் விரும்பும் வழியில் நடக்க எம்மை ஒப்புக்கொடுப்போம்.

அன்பின் இயேசு சுவாமி, இன்று உம்முடைய அன்பின் வெளிப்பாட்டை அறிந்து கொள்ள உதவியதற்காக நன்றி அப்பா. என்னுடைய பாவம் பிதாவையும் குமாரனையும் சிலுவையண்டையில் வேறு பிரித்ததற்காக மன்னிப்பு கேட்டு நிற்கிறேன். இயேசுவின் சிலுவைத்தியாகம் எனது வாழ்வில் ஓர் பதிய அத்தியாயத்தை ஆரம்பிக்கட்டும். தேவனுக்கு கீழ்படிவதன் மூலம் உமது கட்டளைகளை கடைப்பிடித்து வாழ எனக்கு உதவி செய்யும்படியாக இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன் நல்ல பிதாவே, ஆமேன்.

கர்த்தர் உங்கள் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக.

Bro. Francis T. Anthonypillai. Rehoboth Ministries – Praying for Denmark.

Related posts