உன்னதத்தின் ஆறுதல்! வாரம் 20. 10

குறிப்பு : மதங்கள் குறித்த எந்த சிந்தனைகளும் அலைகளுடையது அல்ல என்பதை தாழ்மையுடன் தெரிவிக்கிறோம். மதங்களை தழுவுவதும் கடைப்பிடிப்பதும் அவரவர் தனிமனித சுதந்திரம். ( எந்தவொரு மதக்கருத்துக்களுக்கும் அலைகள் பொறுப்பல்ல..அலைகள் நடு நிலையான ஊடகம், எந்த அரசியலையும், மதங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தவில்லை..! )

தபசுகால சிந்தனை. 2

சிலுவை முடிவல்ல ஓர் புதிய ஆரம்பம்.

சகோதரன். பிரான்ஸ்சீஸ் அந்தோனிப்பிள்ளை.

ரெகோபோத் ஊழியங்கள் – டென்மார்க்கிற்காக பிரார்த்திப்போம்.

இந்நாட்கள் தபசுகாலமாக இருப்பதனால் உலகம் முழுவதும் இயேசுகிறிஸ்துவின் சிலுவை மரணத்தைத் பற்றிய ஓர் சிந்தனையில் தியானத்தில் ஆழ்ந்திருப்பதை நாம் காணக்கூடியதாக உள்ளது. அதேநேரம் இவ்விடுமுறை காலத்தில் என்னத்தை செய்யலாம் என்று பலதிட்டங்களை, காரியங்களைக் குறித்து செயற்பட்டுவரும் மக்களையும் நாம் மறுபுறம் காணக்கூடியதாக உள்ளது. அலைகள் வாசக நேயர்களான உங்களை இந்த தபசுகாலத்தில் ஓர் புதிய ஆரம்பத்தின் வாசலுக்கு அழைத்துச்செல்ல விரும்புகிறேன்.

சிலுவையோர் முடிவல்ல. அது ஓர் பதிய ஆரம்பம். இந்நாட்களை சிலர் உபவாசத்திலும்; இயேசுவின் பாடுகளை நினைவுகூருவதிலும், மாமிச உணவுவகை களைத் தவிர்த்து தங்களை ஒறுத்துக் கொள்வதிலும் கழிப்பதுண்டு. இவை எல்லா வற்றிலும்பார்க்க இந்நாட்கள் எமது வாழ்விலும், சிந்தனையிலும் பெரியமாற்றங்களை களைக் கொண்டுவருமாயின் அதுவே மிகச்சாலச்சிறந்தது. இன்று பலரின் சிந்தனை இயேசு ஏன் சிலுவை மரணத்தை தெரிந்தெடு;த்து ஏற்றுக் கொண்டார் என்பது பற்றியதாகவுள்ளது.

இதனை வேதம் இவ்வாறு நமக்கு விபரிக்கிறது. அவர் பாவஞ்செய்யவில்லை, அவருடைய வாயிலே வஞ்சனை காணப்படவுமில்லை. அவர் வையப்படும்போது பதில் வையாமலும், பாடுபடும்போது பயமுறுத்தாமலும், நியாயமாய்த் தீர்ப்புச்செய்கிற வருக்குத் தம்மை ஒப்புவித்தார். நாம் பாவங்களுக்குச் செத்து, நீதிக்குப் பிழைத் திருக்கும்படிக்கு, அவர்தாமே தமது சாPரத்திலே நம்முடைய பாவங்களைச் சிலுவை யின்மேல் சுமந்தார். அவருடைய தழும்புகளால் குணமானீர்கள். சிதறுண்ட ஆடுகளைப் போலிருந்தீர்கள். இப்பொழுதோ உங்கள் ஆத்துமாக்களுக்கு மேய்ப்பரும் கண்காணியுமானவரிடத்தில் திருப்பப்பட்டிருக்கிறீர்கள். 1பேதுரு 2:22-25.

பாவங்கள் சாபங்களினால் சிதறிப் போயிருந்த மக்களை தேவனிடம் ஒன்றுசேர்க்க இயேசு சிலுவை மரணத்தை ஏற்றுக்கொண்டார். இயேசுவின் சிலுவை மரணம் பாவிகளான எம்மை பாவமன்னிப்பின்மூலம் பரிசுத்தவான்களாக்குமளவிற்கு விடுதலையை, வெற்றியைப் பெற்றுத்தந்துள்ளது. இது எம்மால் எமது நற்கிரியை களால் அல்லது எமது ஒறுத்தலால், உபவாசத்தால் உண்டானது அல்ல. இது முற்றிலும் ஓர் தேவனுடைய ஈவு. தேவன் தாமே இயேசுகிறிஸ்துவை ஈவாக மனிதகுலத்திற்கு கொடுத்தார். இந்த தபசுகாலத்தில் முதலாவது நாம் தேவனிடமிருந்து பெற்றுக்கொண்ட இந்த ஈவே எமது சிந்தையில் இருக்கவேண்டும். வேறு சிந்தை எமக்கு வேண்டாம். அவர் கையில் இருந்து ஈவைப்பெற்ற நாம் அவரின் சிந்தை இந்நாட்களில் நம்மில் உருவாக எம்மை அவர் வழியில் நடக்க விட்டுக்கொடுப்போமா.

இயேசு மக்களிடம் அதாவது, துயரத்தோடு, துக்கத்தோடு, ஆதரவற்றநிலையில், நோய்பிணியால் பரிதவிக்கும் மக்களைப்பார்த்து, வருத்தப்பட்டுப் பாரஞ்சுமக் கிறவர்களே! நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள், நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன். நான் சாந்தமும் மனத்தாழ்மையுமாய் இருக்கிறேன், என் நுகத்தை உங்கள் மேல் ஏற்றுக்கொண்டு, என்னிடத்தில் கற்றுக்கொள்ளுங்கள், அப்பொழுது, உங்கள் ஆத்துமாக்களுக்கு இளைப்பாறுதல் கிடைக்கும். என் நுகம் மெதுவாயும், என்சுமை இலகுவாயும் இருக்கிறது என்றார். மத்தேயு 11:28-30.

இவ்வாறு மக்களுக்கு ஆறுதலையும் தேறுதலையும் கொடுக்க தேவன் மக்களை தன்னிடமாக அழைத்தார். வந்த மக்கள் யாவரும் ஆறுதலையும் தேறுதலையும் கண்டடைந்தனர். ஒருசிலவேளை உங்களுக்கு அருகில் இருக்கும் மக்கள் இந்த நன்மையை அடைந்திருப்பதை நீங்கள் கண்டிருப்பீர்கள்.

வேதம் சொல்கிறது, இரத்தம் சிந்துதல் இல்லாமல் பாவமன்னிப்பு இல்லை என்று. பழைய ஏற்பாட்டுக் காலத்தில் மக்கள் தமது பாவங்களுக்காக மிருகங்களை பலியிடுவார்கள். அந்தப் பலினால் மக்கள் தமது பாவங்களில் இருந்து முற்று முழுவதுமாக விடுதலையை அடைய முடியவில்லை. அதனால் பிதாவாகிய தேவன் இயேசுவை இந்த உலகிற்கு, உலகத்தின் பாவத்தைச் சுமந்துதீர்க்கிற தேவ ஆட்டுக்குட்டியாக – பலியாகிய ஆடாக அனுப்பினார். யோவான் 1:29.

இதை நாம் இன்னும் விளங்கிக்கொள்ள ஏசாயாவின் புத்தகம் 53:4-6 வாசிப்போம் மெய்யாகவே அவர் நம்முடைய பாடுகளை ஏற்றுக்கொண்டு, நம்முடைய துக்கங்களைச் சுமந்தார், நாமோ, அவர் தேவனால் அடிபட்டு வாதிக்கப்பட்டு, சிறுமைப்பட்டவரென்று எண்ணினோம். நம்முடைய மீறுதல்களினிமித்தம் அவர் காயப்பட்டு, நம்முடைய அக்கிரமங்களினிமித்தம் அவர் நொறுக்கப்பட்டார், நமக்குச் சமாதானத்தை உண்டுபண்ணும் ஆக்கினை அவர்மேல் வந்தது@ அவருடைய தழும்புகளால் குணமாகிறோம். நாமெல்லாரும் ஆடுகளைப்போல வழிதப்பித்திரிந்து, அவனவன் தன்தன் வழியிலே போனோம், கர்த்தரோ நம்மெல்லாருடைய அக்கிரமத் தையும் அவர்மேல் விழப்பண்ணினார். பிதாவாகிய தேவனின் பாவமன்னிப்பின் திட்டத்தை இயேசு சிலுவையில் செய்து முடித்தார்.

தேவனுக்குப் பிரியமான மக்களே, இயேசுகிறிஸ்து நீங்களும் நானும் எமது பாவசாபங்களில் இருந்து விடுதலைபெற்று, நித்திய ஜீவனை அடைந்து இம்மையிலும்;, மறுமையிலும் மகிழ்ச்சியாக வாழவேண்டும் என்று தன்னைத்தானே பலியாக ஒப்புக்கொடுத்தார். அதை நினைவுகூர்ந்து இந்த தபசுகாலத்தை தேவனின் சிலுவை மரணத்தைத்தியானித்து ஒரு புதிய வாழ்வின் ஆரம்பத்தை அடைந்து கொள்ள எம்மை அர்ப்பணிப்போம்.

அன்பின் பரலோகபிதாவே, நீர் என்மேல் கொண்டிருந்த அன்பு நிறைந்த பாசத்திற்காக நன்றி அப்பா. என்னை பாவத்தின் கொடியபிடியில் இருந்து விடுதலையாக்க இயேசுவை இவ்வுலகிற்கு அனுப்பி சிலுவையில் பலியாக ஒப்புக்கொடுத்தீரே, நன்றி அப்பா. அந்த சிந்தனையை நான் எனது மனதில் வைத்து இந்த தபசுகாலத்திலிருந்து உம்முடன் வாழ என்னை அர்ப்பணிக்கிறேன். என்னைக்காத்து பாவமன்னிப்பின் நிச்சயத்தை எனது வாழ்வில் அடைந்து கொள்ள உதவி செய்து காத்துக்கொள்ளும் படியாக இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன் நல்லபிதாவே, ஆமேன்.
கர்த்தர் உங்கள் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக.

Bro. Francis T. Anthonypillai. Rehoboth Ministries – Praying for Denmark.

Related posts