அருண் விஜய்யின் ‘மாபியா’ போலீஸ் கதை!

துருவங்கள் பதினாறு ‘நரகாசூரன்’ ஆகிய படங்களை இயக்கி பிரபலமான கார்த்திக் நரேன் அடுத்து,‘ மாபியா’ என்ற படத்தை டைரக்டு செய்துள்ளார். இதில் அருண் விஜய் கதாநாயகனாகவும், பிரியா பவானி சங்கர் கதாநாயகியாகவும் நடித்துள்ளனர்.

‘மாபியா’ படம் குறித்து கார்த்திக் நரேன் கூறியதாவது: “மாபியா எனது இயக்கத்தில் வரும் 3-வது படம். சென்னை பின்னணியில் நடக்கும் போலீஸ் கதை. இரண்டு கதாபாத்திரங்களுக்குள் நடக்கும் கண்ணாமூச்சி ஆட்டம் தான் கதை. அது என்ன? எப்படி? என்பதுதான் கதை.

அருண் விஜய் போதைப் பொருள் தடுப்பு அதிகாரியாக வருகிறார். அவரது உடல்மொழி மேனரிசம் கதாபாத்திரத்துக்கு கச்சிதமாக பொருந்தி உள்ளது.. நடிப்பில் மிரட்டியிருக்கிறார். எல்லாவிதமான கேரக்டரையும் செய்யும் திறமையான நடிகர் அவர். இந்த படத்துக்காக அவர் உடல் எடையை குறைத்து நடித்துள்ளார்.

போதைப் பொருள் சம்பந்தமான கதையாக இருந்தாலும், அதற்குள் ஆழமாக செல்லாமல் வித்தியாசமான திரைக்கதையில் படத்தை எடுத்துள்ளோம். முழுக்க முழுக்க பொழுதுபோக்கு அம்சம் உள்ள படமாகவே இருக்கும்.

பிரசன்னா கதாபாத்திரம் வில்லத்தனமாக இருந்தாலும், ஸ்டைலாக வடிவமைக்கப்பட்டு உள்ளது. அவருக்கும், அருண் விஜய்க்கும் நடக்கும் மோதல்தான் படம். பிரியா பவானி சங்கரும் போலீஸ் அதிகாரியாக வருகிறார். அவரும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். அவருக்கு சண்டை காட்சியும் உள்ளது. இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது.

Related posts