காதலை ஏற்க மறுத்த கல்லூரி பேராசிரியை மரணம்

மராட்டிய மாநிலம் வர்தா பகுதியில் காதலை ஏற்க மறுத்ததால் தீ வைக்கப்பட்ட கல்லூரி பேராசிரியை மரணமடைந்துள்ளார். தீக்காயத்துடன் ஒரு வாரமாக உயிருக்கு போராடி வந்த அங்கிதா பிகட் மரணமடைந்துள்ளார். 24 வயதான கல்லூரி விரிவுரையாளரான அங்கிதாவுக்கு 40% தீக்காயம் ஏற்பட்டிருந்தது. அங்கிதாவுக்கு தீ வைத்த இளைஞருக்கு ஏற்கனவே திருமணமாகி குழந்தை ஒன்றும் உள்ளது.

விக்கி நக்ரால் தன்னை பின் தொடர்ந்து வந்ததை அங்கிதா பிகட் தொடர்ந்து கண்டித்து வந்துள்ளார். அதனால் கோபமடைந்த விக்கி கேனில் பெட்ரோலுடன் வந்து அங்கிதா பிகட் மீது ஊற்றி தீ வைத்து எரித்தார். இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட அங்கிதா, தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனளிக்காமல் இன்று காலை 6.55 மணிக்கு அவர் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

முகம் மற்றும் தலைப் பகுதிகளில் ஆழமான தீக்காயங்கள் ஏற்பட்டதாலும், உள்ளுறுப்புகளும் தீக்காயத்தால் பாதிக்கப்பட்டதாலும் அவர் மரணம் அடைந்ததாகக் கூறப்படுகிறது.

ஒரு தலைக்காதல் விவகாரத்தில் தீ வைக்கப்பட்ட கல்லூரி பேராசிரியர் மரணம் அடைந்ததை அடுத்து, குற்றவாளியின் வீடு மற்றும் உறவினர் வீடுகள் சூறையாடப்பட்டன.

அங்கிதா பிகட் மீது தீ வைத்த இளைஞர் மீது நடவடிக்கை எடுக்க கோரி போராட்டம் நடத்தினர். போராட்டம் நடத்தியவர்கள் மீது போலீசார் லேசான தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Related posts