கொரோனா வைரஸ் என்ற பிசாசை வீழ்த்துவோம் சீன அதிபர் சபதம்

கொரோனா வைரஸ் ஒரு பிசாசு. அந்த பிசாசை வீழ்த்துவோம் என சீன அதிபர் ஜி ஜின்பிங் கூறினார்.

சீனாவின் ஹுபே மாகாணம் யுகான் நகரில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் சீனா முழுவதும் வேகமாக பரவி வருகிறது. திபெத் தவிர மற்ற அனைத்து மாகாணங்களுக்கும் இந்த வைரஸ் தாக்குதல் பரவியுள்ளது.

சீனாவில் இந்த வைரஸ் தாக்குதலுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 132 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை வைரஸ் தாக்குதல் உறுதியாகி உள்ள நோயாளிகளின் எண்ணிக்கை 5,974 ஆக உயர்ந்துள்ளது.

தாய்லாந்து, பிரான்ஸ், அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா உள்ளிட்ட 17 நாடுகளில் குறைந்தது 47 பேருக்கு நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளன. சீனாவுக்கு வெளியே எந்த இறப்பும் இதுவரை பதிவாகவில்லை.

இந்த வைரஸ் பாதிப்பை கட்டுப்படுத்தும் முயற்சியில் உலக விஞ்ஞானிகள் ஈடுபட்டு உள்ளனர். இந்த வைரஸ் தொற்று உச்சத்தை தொட இன்னும் 10 நாட்கள் ஆகும் என்கிறது சீன சுகாதாரத் துறை.

இந்த நிலையில் சீன அதிபர் ஜி ஜின்பிங் நேற்று பெய்ஜிங்கில் உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயசை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

பின்னர் ஜி ஜின்பிங் கொரோனா வைரஸ் ஒரு பிசாசு அந்த பிசாசை வீழ்த்துவோம் என கூறினார்.

Related posts