திருமணம் நடந்ததாக வதந்தி – நடிகை சுனைனா வருத்தம்

காதலில் விழுந்தேன் படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் சுனைனா. மாசிலாமணி, யாதுமாகி, வம்சம் உள்பட பல படங்களில் நடித்துள்ளார். தெலுங்கு, கன்னடம், மலையாள படங்களிலும் வந்தார்.

கவுதம் மேனன் இயக்கத்தில் தனுஷ், மேகா ஆகாஷ் நடித்து திரைக்கு வந்த எனை நோக்கி பாயும் தோட்டா படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் தோன்றினார்.

சில்லுக்கருப்பட்டி படத்தில் சிறப்பாக நடித்து இருந்ததாகவும் பாராட்டுகள் கிடைத்துள்ளன. சுனைனா சில மாதங்களுக்கு முன்பு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆண் நண்பர் ஒருவருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டார். அவரை சுனைனா திருமணம் செய்து கொள்ள முடிவு செய்து இருப்பதாக பேசப்பட்டது.

சமீபத்தில் அவருக்கு ரகசிய திருமணம் முடிந்து விட்டதாக சமூக வலைத்தளத்தில் தகவல்கள் பரவின. இதற்கு சுனைனா விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறியதாவது:-

“எனக்கு திருமணம் முடிந்து விட்டதாக தகவல் பரவி வருகிறது. அதை பார்த்து பலரும் என்னை விசாரித்த வண்ணம் இருக்கிறார்கள். இது வருத்தம் அளிக்கிறது. எனக்கு திருமணம் நடந்ததாக வெளியான தகவலில் உண்மை இல்லை. வதந்திதான், இந்த வதந்தியை உருவாக்கியது யார் என்று தெரியவில்லை.

எனது திருமணம் ரகசியமாக நடக்காது. மாப்பிள்ளை முடிவானதும் எல்லோருக்கும் தெரிவித்து பலரது முன்னிலையில் திருமணம் செய்து கொள்வேன்.” இவ்வாறு சுனைனா கூறினார்.

Related posts