விஜய் படத்தின் கதை கசிந்தது?

பிகில் படத்துக்கு பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கும் படத்தில் விஜய் நடித்து வருகிறார். இது அவருக்கு 64-வது படம். இந்த படம் என்ன மாதிரி கதை என்று அறிய ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர். ஏற்கனவே படத்தில் விஜய் நடிக்கும் தோற்றம் வெளியாகி படக்குழுவினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. லேசான தாடியுடன் இருந்த அந்த புகைப்படம் வலைத்தளத்தில் வைரலானது.

இந்த நிலையில் படத்தின் கதையும் கசிந்ததாக பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. நீட் தேர்வுக்கு பலியான அனிதா வாழ்க்கையை மையமாக வைத்து இந்த படம் தயாராவதாக கூறப்படுகிறது. அரியலூரை சேர்ந்த மாணவி அனிதா பிளஸ்-2 தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்று டாக்டராகும் கனவில் இருந்தார். நீட் தேர்வால் அது நிராசையாகி விரக்தியில் தற்கொலை செய்து கொண்டார். இது நாட்டையே உலுக்கியது.

இந்த சம்பவத்தை மையமாக வைத்தே தற்கால கல்வி முறையை சாடும் படமாக இது தயாராவதாக வலைத்தளத்தில் தகவல் பரவி வருகிறது. படக்குழுவினர் இதனை உறுதிப்படுத்தவில்லை. இந்த படத்தில் விஜய் கல்லூரி பேராசிரியராக நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. பெரும்பகுதி காட்சிகள் கல்லூரியில் நடந்து வருகிறது.

கதாநாயகியாக மாளவிகா மோகனன் நடிக்கிறார். விஜய் சேதுபதி, பாக்யராஜ் மகன் சாந்தனு, மலையாள நடிகர் அந்தோணி வர்கீஸ், ஆண்ட்ரியா ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

Related posts