பிகில் திரைப்படம் நாளை வெளியாவதில் சிக்கல் இல்லை

பிரேசில் என்ற தலைப்பில் தான் எழுதிய கதையை பயன்படுத்தி பிகில் படத்தை எடுத்துள்ளதாக வழக்கு தொடரப்பட்டிருந்த நிலையில் மனுவில் திருத்தங்கள் உள்ளதால் புதிய மனு தாக்கல் செய்ய சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

அட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பில் ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ள படம் பிகில். பெண்கள் கால்பந்து விளையாட்டை மையப்படுத்தி உருவாகியுள்ள இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். இவர்களுடன் யோகி பாபு, கதிர், ஜாக்கி ஷெராஃப் உள்பட பலர் நடித்துள்ளனர்.

தீபாவளியை முன்னிட்டு நாளை இத்திரைப்படம் ரிலீசாகிறது. இந்நிலையில் ‘பிரேசில்’ என்ற தலைப்பில் தான் எழுதிய கதையை பயன்படுத்தி பிகில் படத்தை எடுத்துள்ளதாக இயக்குநர் அம்ஜத் மீரான் என்பவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தார். அந்த மனுவில் தனது கதையையும், அட்லீ கதையையும் ஆராய்ந்து அறிக்கை அளிக்க வழக்கறிஞர் ஆணையரை நியமிக்க வேண்டும். படத்தின் கதையை பயன்படுத்தியதற்காக அட்லீ மற்றும் படத்தயாரிப்பு நிறுவனம் ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது.

மனுதாரர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் திருத்தங்கள் உள்ளதால் புதிய மனு தாக்கல் செய்ய சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. மேலும் இந்த வழக்கின் மீதான விசாரணை நவம்பர் 5-ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

Related posts