ஐ.தே.க மாநாட்டில் 5 யோசனைகள் முன்வைக்கப்பட்டு ஏகமனதாக அங்கீரிப்பு

ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக சஜித் பிரேமதாசவை பெயரிடுவது குறித்து கட்சியின் தலைவர் பிரதமர் ரணில் விக்ரமசிங்க முன்வைத்த பிரேரணைக்கு ஐக்கிய தேசிய கட்சியின் விசேட மாநாட்டில் ஏகமனதாக இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய தேசிய கட்சியின் விசேட மாநாடு கொழும்பு சுகததாச உள்ளக அரங்கில் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் இன்று (03) இடம்பெற்றது.

இதன்போது கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக பிரதித் தலைவர் அமைச்சர் சஜித் பிரேமதாசவின் பெயரை கட்சியின் தலைவர் முன்மொழிந்தார்.

அதன் பின்னர் அந்த கட்சியின் பொதுச் செயலாளர் அக்கில விராஜ் காரியவசத்தினால் மேலும் 5 யோசனைகள் முன்வைக்கப்பட்டு அவையும் ஏகமனதாக அங்கீரிக்கப்பட்டன.

2019 ஆம் ஆண்டு செப்டெம்பர் 26 ஆம் திகதி கட்சி செயற்குழு 3 பிரதான யோசனைகளுக்கு அனுமதி வழங்கியிருந்தது.

அதன்படி அதிகார பகிர்வு, தேர்தல் முறைமையை மாற்றி அமைத்தலின் ஊடாக நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை ஒழித்தல் மற்றும் அரசாங்கத்தால் ஆரம்பிக்கப்பட்ட புதிய அரசியல் அமைப்பு வரைபை முன்னோக்கி கொண்டு செல்லல் ஆகியன அவற்றுள் அடங்கும்.

மேலும் கட்சி யாப்பின் 08.01 (அ) சரத்துக்கு அமைய 2019 ஜனவரி 24 ஆம் திகதி ரணில் விக்ரமசிங்க கட்சியின் தலைவராக செயற்குழுவினால் தெரிவு செய்யப்பட்டமையும் இந்த மாநாட்டில் மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டது.

அத்துடன் பாராளுமன்ற ஜனாநாயகத்தை பாதுகாக்க முன்னின்று செயற்பட்ட சபாநாயகர் கருஜயசூரியவை கௌரவப்படுத்துவது உள்ளிட்ட 6 யோசனைகள் ஐக்கிய தேசிய கட்சியின் விசேட மாநாட்டில் நிறைவேற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related posts