உன்னதத்தின் ஆறுதல்! வாரம் 19. 26

குறைவுள்ள மனிதனும் நிறைவுள்ள தேவனும்.

சகோதரன். பிரான்சீஸ் அந்தோனிப்பிள்ளை.

ரெகொபோத் ஊழியங்கள் – டென்மார்க்கிற்காக ஜெபிப்போம்.

என் தேவன் தம்முடைய ஐசுவரியத்தின்படி உங்கள் குறைவையெல்லாம் கிறிஸ்து இயேசுவுக்குள் மகிமையிலே நிறைவாக்குவார். பிலிப்பியர் 4:19. நிறைவானது வரும்போது குறைவானது ஒழிந்துபோம். 1கொரிந்தியர் 13:10.

இன்று நீங்களும் நானும் சந்திக்கும் மனிதர்களில் பெரும்பாண்மையானவாகள் கூறுவது தங்களின் குறைவைப்பற்றி. மிகச்சொற்ப மனிதர்கள் மட்டும் தங்களின் நிறைவைக் கூறுவர். அதனால் குறைவே இல்லாத மனிதன் ஒருவரும் இல்லை முடிவுக்கு உலகம் வந்திருப்பதை நாம் காணக்கூடியதாக உள்ளது. ஏதாவது ஒரு குறைவு ஒவ்வொருவருக்கும், ஒவ்வொரு குடும்பத்திலும் உண்டு. ஏழைக்கு ஆகாரம் குறைவு. செல்வந்தனுக்கு சமாதானம் குறைவு. வசதி உள்ளவனுக்கு நிம்மதி குறைவு. பெருந்தீனிக்காரனுக்கு உடல் நலக்குறைவு.

எங்கு திரும்பினாலும் குறைவு, குறைவு. ஒவ்வொரு மனிதர்களும் தனக்கிருக்கும் குறைவுகளினால் வேதனையுற்று, உள்ளத்தால் தேறுதல் அற்று இருப்பதை நாம் காணக்கூடியதாக உள்ளது. ஆனால் வேதம் மேலே நாம் வாசித்த வசனத்தின் ஊடாக மிகப்பெரிய உண்மையை உலகிற்கு எடுத்துரைக்கிறது. என் தேவன் தம்முடைய ஐசுவரியத்தின்படி உங்கள் குறைவையெல்லாம் கிறிஸ்து இயேசுவுக்குள் மகிமையிலே நிறைவாக்குவார் என்று.

குறைவினால் வாடும் மக்களுக்கு உலகமும் ஞானிகளும் கொடுக்கும் ஆறுதல் அல்லது, ஆலோசனை இரண்டு வகையானது.

1. உங்களை விடக் குறைவுகள் அதிகம் உள்ள மக்களைப் பார்த்து ஆறுதல் அடைந்து கொள்ள வேண்டும்.

2. குறைவுகளை பொருட்படுத்தாமல் அப்படியே ஏற்றுக்கொண்டு இதுதான் வாழ்க்கை முறை என்று திருப்தியுடன் வாழ வேண்டும்.

இது தவறல்ல.ஆனால் வேதம் இவ்வாறு சொல்கிறது, தத்துவ ஞானிகளின் ஆலோசனைகளையும், அறிவாளிகளின் அறிவுரைகளையும் ஒதுக்கிவிட்டு கிறிஸ்து இயேசுவை நோக்கிப்பாருங்கள் என்று. அவர் குறைவுகளை எல்லாம் நிறை வாக்குகிறவர். மனதுருகி அற்புதம்செய்து ஆறுதல் படுத்துபவர். துக்கத்தை சந்தோசமாக மாற்றுகிறவர். கண்ணீரை ஆனந்தக் களிப்பாய் மாற்றுகிறவர். தோல்வியை நிறைவாய் மாற்றுகிறவர். கசந்து போயுள்ள வாழ்க்கையை இன்பமான மதுரமான வாழ்க்கையாக மாற்றுபவர். குறைவுகளை நிறைவாக்கும் தேவனிடம் வரும்போது இரண்டு காரியங்கள் உங்களின் வாழ்க்கையில் நடைபெறுகிறது.

முதலாவது, உலக பிரகாரமான அல்லது சரீரப் பிரகாரமான தேவைகள் சந்திக்கப்படுகிறது. அதாவது நோய்கள் குணமாதல், கஸ்டங்கள் வேதனையில் இருந்து ஆறுதல். பிசாசின் பிடியில் இருந்து விடுதலை, பொருளாதார நெருக்கடியில் இருந்து விடுதலை, வேதனையுடன்கூடிய குடும்ப வாழ்க்கையில் ஆறுதல், தோல்விகளில் இருந்து வெற்றிவாழ்க்கை இப்படியாக பலவற்றை எடுத்துக் கூறலாம். இவற்றை நாம் பழைய ஏற்பாட்டிலும், புதிய ஏற்பாட்டிலும் காணலாம்.

புதிய ஏற்பாட்டில் முதல் நான்கு சுவிசேஷசங்களை வாசித்துப் பார்த்தால் இயேசுவிடம் வந்தவர்கள் அடைந்துகொண்ட அற்புதங்களை, ஆறுதலை, நோயில் இருந்து விடுதலையை, சிறுமைப்பாட்டில் இருந்து விடுதலை அடைந்துள்ளதை நாம் அறிந்து கொள்ளலாம். இத்தனை ஆயிரக்கணக்கான நன்மைகளை மக்கள் அடைந்ததற்கு காரணம் தேவனைத் தேடிப்போய் தங்களை ஆறுதற்படுத்தும்படி அவரிடம் வேண்டிக் கொண்டதுதான். வேண்டிக் கொண்டவர்கள் அத்தனை பேரும் இயேசுவிடம் இருந்து ஆறுதலை, நன்மையை கண்டடைந்தர்கள்.

இதை வாசித்துக் கொண்டிருக்கும் அன்பான அலைகள் வாசகநேயர்களே, நீங்கள் எப்பேற்பட்ட சூழ்நிலையில் இருந்தாலும் பறவாயில்லை, இயேசுவே எனக்கு இரங்கி எனது வேதனைகளில் இருந்து நான் ஆறுதலைக் கணடுகொள்ள எனக்கு இரங்கும் என்று தேவனிடம் மன்றாடுங்கள். அவர் உங்களது கதறலைக்கேட்டு ஆறுதலைக் கட்டளையிடுவார்.

இரண்டாவது, தேவகிருபையால் கிடைக்கும் தேவபராமரிப்பு, உள்ளான மனிதனில் செழிமை, தேவனுடனான உறவு. இதை நாம் முழுமையாக விளங்கிக்கொள்ள சங்கீதம் 91ம் அதிகாரம் முழுவதையும் வாசிக்க வேண்டும். உன்னதமானவரின் மறைவிலிருக்கிறவன் சர்வவல்லவருடைய நிழலில் தங்குவான். நான் கர்த்தரை நோக்கி, நீர் என் அடைக்கலம், என் கோட்டை, என் தேவன், நான் நம்பியிருக்கிறவர் என்று சொல்லுவேன். அவர் உன்னை வேடனுடைய கண்ணிக்கும், பாழாக்கும் கொள்ளைநோய்க்கும் தப்புவிப்பார். அவர் தமது சிறகுகளாலே உன்னை மூடுவார். அவர் செட்டைகளின் கீழே அடைக்கலம் புகுவாய். அவருடைய சத்தியம் உனக்குப் பரிசையும் கேடகமுமாகும். இரவில் உண்டாகும் பயங்கரத்துக்கும், பகலில் பறக்கும் அம்புக்கும், இருளில் நடமாடும் கொள்ளைநோய்க்கும், மத்தியானத்தில் பாழாக்கும் சங்காரத்துக்கும் பயப்படாதிருப்பாய். உன் பக்கத்தில் ஆயிரம்பேரும், உன் வலதுபுறத்தில் பதினாயிரம்பேரும் விழுந்தாலும், அது உன்னை அணுகாது.

உன் கண்களால் மாத்திரம் நீ அதைப் பார்த்து, துன்மார்க்கருக்குவரும் பலனைக் காண்பாய். எனக்கு அடைக்கலமாயிருக்கிற உன்னதமான கர்த்தரை உனக்குத் தாபரமாகக் கொண்டாய். ஆகையால் பொல்லாப்பு உனக்கு நேரிடாது, வாதை உன் கூடாரத்தை அணுகாது. உன் வழிகளிலெல்லாம் உன்னைக் காக்கும்படி, உனக்காகத் தம்முடைய து}தர்களுக்குக் கட்டளையிடுவார். உன் பாதம் கல்லில் இடறாதபடிக்கு அவர்கள் உன்னைத் தங்கள் கைகளில் ஏந்திக்கொண்டு போவார்கள். சிங்கத்தின்மேலும் விரியன்பாம்பின்மேலும் நீ நடந்து, பாலசிங்கத்தையும் வலு சர்ப்பத்தையும் மிதித்துப்போடுவாய். அவன் என்னிடத்தில் வாஞ்சையாயிருக்கிற படியால் அவனை விடுவிப்பேன். என் நாமத்தை அவன் அறிந்திருக்கிறபடியால் அவனை உயர்ந்த அடைக்கலத்திலே வைப்பேன். அவன் என்னை நோக்கிக் கூப்பிடுவான், நான் அவனுக்கு மறுஉத்தரவு அருளிச்செய்வேன். ஆபத்தில் நானே அவனோடிருந்து, அவனைத் தப்புவித்து, அவனைக் கனப்படுத்துவேன். நீடித்த நாட்களால் அவனைத் திருப்தியாக்கி, என் இரட்சிப்பை அவனுக்குக் காண்பிப்பேன்.

பிரியமான மக்களே, கிறிஸ்த்தவ வாழ்கை என்பது, தேவனுடன் வாழும் ஓர் வாழ்க்கை. இயேசுவுடன் தொடர்பை ஏற்படுத்திக் கொள்ளும் ஓர் உறவுமுறை. அதன் நிமித்தமாக அப்பா, பிதாவே என்று அழைக்கும் புத்திர சுவிகாரத்தைப் பெற்றுள்ளோம். (தகப்பன் – பிள்ளைகள் போன்ற உறவு முறை) இந்த உறவு முறைதான் மனிதர்களை பாவத்தில் இருந்து விடுதலையை பெற்றுக்கொள்ள உதவுகிறது. இந்த உறவுமுறை தான் தேவனிடத்தில் இருந்து ஆறுதலைப் பெற்றுக்கொள்ள உதவுகிறது. இந்த உறவு முறைதான் தேவபராமரிப்பை அடைந்து கொள்ள உதவுகிறது. இந்த உறவுமுறையை வாழ்க்கையில் கண்டுகொள்ள என்னுடன் சேர்ந்து இந்த ஜெபத்தை தேவனிடம் ஒப்புக்கொடு.

அன்பின் பரலோக பிதாவே, உமக்கு நன்றி. இன்று உம்முடன் ஓர் உறவு முறையை ஏற்படுத்திக் கொள்வதன் மூலம் மனுக்குலம் அடையும் நன்மைகளை அறிந்து கொள்ள உதவியதற்காக உமக்கு நன்றி அப்பா. எனது குறைகளை நீக்கி என்னை விடுதபை;படுத்தி, ஆறுதலை எனது வாழ்வில் கண்டுகொள்ள உதவி செய்யும் அப்பா. உம்முடன் ஏற்படும் உறவின் மூலம் தேவபராமரிப்புடன் வாழ உதவி செய்து என்னைக்காத்துக் கொள்ளும் பிதாவே, ஆமென்.
கர்த்தர் உங்கள் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக!

Related posts