உங்கள் பிரச்சாரம் இல்லையே? பதிலளித்த வடிவேலு

விஜயகாந்துடன் ஏற்பட்ட பிரச்சினைக்குப் பிறகு, திமுக-வில் இணைந்து பிரச்சாரம் மேற்கொண்டார் வடிவேலு. அந்தத் தேர்தலில் திமுக தோல்வியைத் தழுவியது. அதனைத் தொடர்ந்து அரசியல் களத்திலிருந்து ஒதுங்கியே இருந்தார் வடிவேலு. இந்தத் தேர்தலில் சாலிகிராமத்தில் தனது வாக்கினைப் பதிவு செய்தார் வடிவேலு.

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்கள் மத்தியில், “இந்தத் தேர்தல் திருவிழாவுக்குச் சமம். மக்கள் நல்லா யோசித்து, சிந்தித்து வாக்களிக்க வேண்டும் என்று சொல்லும் நேரம் இதுவல்ல. மக்கள் ரொம்ப அழகா தெளிவாக இருக்கிறார்கள். போய் போட்டுட்டு வந்துருவோமா. போய் எதிலாச்சும் குத்திட்டு வந்துருவோம். எவன் பகையும் வேண்டாம் என்று நம்ம பாட்டன் எல்லாம் சொல்வார்கள். அதே மாதிரி வாக்குச்சீட்டில் அனைவருக்கும் வாக்களித்துவிட்டு சீட்டையும் கையிலே வைச்சிருப்பது மாதிரி என் படத்தில் ஒரு காமெடி காட்சி வைச்சிருப்பேன்.

இன்று அப்படியல்ல, உலகம் உள்ளங்கைக்குள் வந்துவிட்டது. யார்கிட்டயும் கேட்டு ஓட்டுப் போட வேண்டிய அவசியம் கிடையாது. அம்மா, அப்பாவுக்கு யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்று இன்றைய இளைஞர்கள் சொல்கிறார்கள். ரொம்ப வித்தியாசமான தேர்தல், அநேகமாக இந்த தேர்தல் முடிந்தவுடன், கடுமையான மழை பெய்யும் என நினைக்கிறேன். ஏனென்றால், இந்தத் தேர்தலுக்குப் பிறகு மக்கள் அனைவருக்குமே நல்ல விடிவுகாலம் ஒன்று வரும். யார் ஆட்சிக்கு வந்தாலும், இந்த மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்பது தான் என் வேண்டுகோள்” என்று பேசினார்.

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கும் காமெடியாகப் பதிலளித்தார் வடிவேலு. அவை பின்வருமாறு:

கருணாநிதி, ஜெயலலிதா ஆகிய இரண்டு தலைவர்கள் இல்லாத தேர்தலை எப்படி பார்க்கிறீர்கள்?

அதைத் தான் இவ்வளவு நேரம் சொல்லியாச்சுல. மறுபடியும் முதல்ல இருந்தா?

இந்த தேர்தலில் உங்கள் பிரச்சாரம் இல்லையே…

நாளை மறுநாள் வேணா கொண்டு போய் தள்ளிவிட்டுப் போங்கள். ஏன் பேசாமல் இருப்பது பிடிக்கலயா..

யாரும் அடக்கினார்களா?

அதெல்லாம் நமக்கு எதுக்கு? படம் முடிஞ்சுப் போச்சுப்பா. வணக்கம் போடப் போறாங்க.

இளைய தலைமுறைக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?

அதைத் தான் இவ்வளவு நேரம் சொன்னேன்ல. மறுபடியும் முதலில் இருந்தா?

Related posts