ஆழ்ந்த வருத்தங்கள் ஜாலியன் வாலாபாக் படுகொலை

ஜாலியன் வாலாபாக் படுகொலை சம்பவம் நடந்து நூறு ஆண்டுகள் ஆகும் நிலையில், இந்தச் சம்பவத்துக்கு பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தில் அந்நாட்டு பிரதமர் தெரஸா மே ஆழ்ந்த வருத்தங்களைத் தெரிவித்தார். எனினும் முழுமையான மன்னிப்பு கோரவில்லை.

பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில், ஆங்கிலேயர்களை எதிர்த்து நடந்த விடுதலை போராட்டத்தை நசுக்க 1919-ல் ரவுலட் சட்டம் அமலாக்கப்பட்டது. இதை எதிர்க்கும் வகையில், அமிர்தசரஸில் உள்ள ஜாலியன் வாலாபாக்கில் ஆயிரக்கணக்கான சீக்கியர்கள் கூடினர். ஆங்கிலேயரை எதிர்த்து சுதந்திரப் போராட்டப் பாடல்களையும் கூட்டத்தினர் பாடிக்கொண்டிருந்தனர்.

அங்கு தன் படையுடன் வந்த ஆங்கிலேய அதிகாரியான ஜெனரல் டயர், கூட்டத்தினர் மீது கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தினார். இதில் 1600-க்கும் மேற்பட்டோர் பலியாகினர். ஆயிரத்திற்கும் அதிமானவர்கள் படுகாயம் அடைந்தனர். பிரிட்டிஷ் வரலாற்றில் அவமானமாக இடம்பெற்ற இந்தச் சம்பவத்திற்கு அந்நாட்டு அரசு மன்னிப்பு கேட்க வேண்டும் என சமீப ஆண்டுகளாகக் குரல்கள் எழுந்து வருகின்றன.

இந்திய வம்சாவளி உறுப்பினர்கள் ஜாலியன் வாலாபாக் சம்பவத்திற்கு பிரிட்டிஷ் அரசு மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தினர். ஆனால் பிரிட்டிஷ் அரசியல்வாதிகளில் ஒரு பிரிவினர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். நடந்து முடிந்த சம்பவத்துக்கு பிரிட்டிஷ் அரசு மன்னிப்பு கோருவது சரியாக இருக்காது என தெரிவித்தனர்.

இந்தப் படுகொலை சம்பவம் நடந்து வரும் ஏப்ரல் 13-ல் 100 ஆண்டுகள் நிறைவுபெற உள்ளன. இந்நிலையில் பிரிட்டிஷ் நாடாளுமன்றம் இன்று கூடியது. இந்தக் கூட்டத்தில் ஜாலியன் வாலாபாக் படுகொலைக்காக ஆழ்ந்த வருத்தங்களை தெரிவித்துக் கொள்வதாக பிரிட்டிஷ் பிரதமர் தெரஸா மே அறிவித்தார். எனினும் முழுமையான மன்னிப்பு கேட்காமல் அவர் விட்டு விட்டார்.

இதுபோலவே நாடாளுமன்றத்தில் பேசிய பிரிட்டிஷ் எதிர்க்கட்சித் தலைவர் ஜெர்மி கரியோனும் முழு மனதுடன் வருத்தங்களைத் தெரிவித்துக் கொள்வதாகக் கூறினார்.

Related posts