குறளரசன் திருமணம்: ரஜினிக்கு நேரில் அழைப்பு : டி.ராஜேந்தர்

தனது மகன் குறளரசனின் திருமணத்தில் கலந்து கொள்ளுமாறு நடிகர் ரஜினிகாந்தை நேரில் சென்று அழைப்பு விடுத்துள்ளார் டி. ராஜேந்தர்.

டி.ராஜேந்தரின் மகனும், சிம்புவின் தம்பியுமான குறளரசன், ‘இது நம்ம ஆளு’ படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார். சிம்பு ஹீரோவாக நடித்த இந்தப் படத்தை, பாண்டிராஜ் இயக்கினார். நயன்தாரா, ஆண்ட்ரியா இருவரும் ஹீரோயின்களாக நடித்தனர்.

2016-ம் ஆண்டு இந்தப் படம் ரிலீஸானது. அதன்பிறகு வேறெந்தப் படத்துக்கும் இசையமைக்காத குறளரசன், தற்போது ஆல்பம் ஒன்றை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

இந்நிலையில், குறளரசனுக்குத் திருமணம் நிச்சயமானது. தான் காதலித்த இஸ்லாமியப் பெண்ணைத் திருமணம் செய்யவுள்ளார் குறளரசன். அதற்காக கடந்த பிப்ரவரி 16-ம் தேதி டி.ராஜேந்தர் முன்னிலையில் இஸ்லாம் மதத்துக்கு மாறினார். ஆனாலும், குறளரசன் என்ற தன்னுடைய பெயரை அவர் மாற்றிக் கொள்ளவில்லை.

மணப்பெண்ணின் பெயர் நபீலா ஆர். அஹமத். இவர்களுடைய திருமண வரவேற்பு, வருகிற 29-ம் தேதி சென்னை கிண்டியிலுள்ள ஐடிசி கிராண்ட் சோழா ஹோட்டலில் உள்ள ராஜேந்திர ஹாலில் நடைபெறுகிறது.

இத்திருமண விழாவில் கலந்து கொள்ளுமாறு தேமுதிக தலைவர் விஜயகாந்த் உள்ளிட்ட சினிமா மற்றும் அரசியல் பிரபலங்களுக்கு அழைப்பிதழ் வைத்து வருகிறார் டி.ராஜேந்தர்.

அந்த வகையில் இன்று நடிகர் ரஜினிகாந்தை அவரது இல்லத்தில் சென்று தனது மகனின் திருமணத்தில் கலந்து கொள்ள அழைத்தார் டி.ராஜேந்தர்.

ரஜினி தனது கட்சி அறிவிப்பை வெளியிட்டது முதல் அவரை டி. ராஜேந்தர் சரமாரியாக விமர்சித்து வந்தார். இருப்பினும் தனது மகனின் திருமணத்துக்கு ரஜினியின் இல்லத்துக்கே சென்று அழைப்பு விடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Related posts