இராக்கில் கப்பல் கவிழ்ந்து விபத்து: 100 பேர் பலி

இராக்கில் கப்பல் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 100 பேர் பலியாகினர். இவர்களில் பெரும்பாலானவர்கள் குழந்தைகள், பெண்கள்.

இதுகுறித்து ஊடகங்கள் தரப்பில், ”இராக்கின் வடக்குப் பகுதியில் உள்ள மொசுல் நகரில் பிரபல சுற்றுலாப் பகுதியாகக் கருதப்படும் டைகிரிஸ் நதிக்கு அருகில் குர்திஷ் புத்தாண்டை சிறிய அளவிலான கப்பல் ஒன்றில் வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.

கொண்டாட்டத்தின்போது திடீரென விபத்து ஏற்பட்டதில் கப்பல் கவிழ்ந்தது. இதில் மூழ்கி 100 பலியாகினர். 50க்கும் மேற்பட்டவர்கள் மீட்கப்பட்டனர். மீட்கப்பட்டவர்களில் பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அளவுக்கு மீறி நபர்களை ஏற்றியதே விபத்துக்குக் காரணம்” என்று செய்தி வெளியானது.

இந்த விபத்தை நேரில் சென்று பார்வையிட்ட பிறகு இராக் பிரதமர் அடெல் அப்தெல் மஹ்தி கூறும்போது, ”மூன்று நாட்கள் தேசம் முழுவதும் துக்க தினமாக அனுசரிக்கப்படும்” என்றார்.

இந்த விபத்து இராக்கில் சமீபத்தில் ஏற்பட்ட மோசமான விபத்தாகப் பார்க்கப்படுகிறது.

Related posts