ஜனாதிபதி முறையை நீக்க ஐ.தே.க. பூரண ஆதரவு!

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை நீக்கும் 20 ஆம் திருத்தத்திற்கு ஐக்கிய தேசிய கட்சி ஆதரவை தெரிவிக்கும் என அக் கட்சியின் தலைவரும் பிரதமருமான ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை நீக்கும் 20 ஆம் திருத்தம் குறித்து மக்கள் விடுதலை முன்னணி பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் சகல கட்சிகளையும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றது.

அதன் ஒரு கட்டமாக இன்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் ஐக்கிய தேசிய கட்சியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் இடம்பெற்ற இந்த சந்திப்பில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, அமைச்சர் மலிக் சமரவிக்கிரம, அனுரகுமார திசாநாயக, விஜித ஹேரத், நலிந்த ஜெயதிஸ்ஸ ஆகியோர் கலந்துகொண்டனர்.

நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை நீக்குவது என்பதே ஐக்கிய தேசிய கட்சியின் கொள்கையாகும். கட்சியின் மாநாட்டிலும் இந்த நிலைப்பாட்டினை உறுதி பூண்டுள்ளோம். கடந்த ஜனாதிபதி தேர்தலிலும் ஜனாதிபதி அந்த வாக்குறுதிகளை கொடுத்ததை நாம் நிராகரிக்கவில்லை. அவர் மட்டுமல்ல இதற்கு முன்னர் வந்தவர்களும் இதே கருத்துக்களை தான் கூறுகின்றனர்.

அவ்வாறு இருக்கையில் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை நீக்கும் 20 ஆம் திருத்தத்திற்கு ஐக்கிய தேசிய கட்சி ஆதரவை தெரிவிக்கும். கட்சியின் செயற்குழு கூட்டத்திலும் நாம் அதே தீர்மானத்தை எடுத்துள்ளோம் ஆனால் ஐக்கிய தேசிய முன்னணிக்குள் சில சில குழப்பங்கள் உள்ளது. ஆகவே ஐக்கிய தேசிய முன்னணியாக நாம் பேச்சுவார்த்தை நடத்தி எமது நிலைப்பாட்டினை தெரிவிக்கின்றோம்.

Related posts