இலங்கையில் தமிழ் மக்கள் சமமாக நடத்தப்படவில்லை : சம்மந்தர்

சிங்கப்பூர், மலேசியா ஆகிய நாடுகளை எடுத்துக்கொண்டால் அந்நாடுகளின் நேர்மை, சமத்துவம் என்பன இன்று அந்நாடுகளை அபிவிருத்தி அடைய செய்துள்ளன என்று பாராளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான இறுதிநாள் விவாதம் பாராளுமன்றத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்று வருகின்றது. அதில் பங்கேற்று உரையாற்றியபோதே சம்பந்தன் இவ்வாறு தெரிவித்தார்.

அதே போன்று எமது நாட்டிலும் மக்கள் சமத்துவத்துடன் சமமாக நடத்தப்பட வேண்டும். இலங்கை எமது நாடு என்ற உணர்வு சகல மக்களுக்கும் ஏற்பட வேண்டும். அமைதி, ஐக்கியம் உள்ள நாடாக மாறவேண்டும் என்றும் கூறினார்.

இரு தரப்பினரும் அரசியல் தீர்வை அடைவதில் வெற்றிபெற்றிருந்தால் யுத்தத்தை தவிர்த்திருக்கலாம். என்றும் அவர் கூறினார். தமிழ் மக்கள் கோரிய அரசியல் தீர்வை தருவதாக கூறினீர்கள். அதனால், விடுதலைப் புலிகளுடனான யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவர முழு உலகமும் உதவியது.

ஆனால் நீங்கள் கூறியதை செய்யவில்லை. நியாயமான அரசியல் தீர்விற்காக தமிழ் மக்கள் அர்ப்பணிப்புடன் செயற்பட்டுள்ளார்கள். இன்றைய நிலையில் அது தோல்வியை நோக்கி செல்வதை பார்க்கின்றோம்.

காரணம், வீண்விரயங்கள், ஊழல்கள் என்பன மலிந்துவிட்டன. எனினும், நாம் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகின்றோம் எனவும் கூறினார்.

இருதரப்பினரும் ஒருவரையொருவர் குற்றஞ்சாட்டிக்கொண்டிருந்தால் பொருளாதாரத்தை வெற்றிகொள்ள முடியாது. உள்நாட்டு முதலீடுகள் சிறந்த முறையில் இல்லை.

எப்படியாவது சமாளித்துக்கொண்டு போக நினைக்கின்றனர். ஆனால் அவ்வாறு செய்யமுடியாது. யுத்தத்தின் காரணங்கள் இன்னும் கண்டறியப்படவில்லை. என்றும் மேலும் தெரிவித்தார்.

Related posts