சர்க்கார் திரைப்படத்தை காண்பிக்கவிடாத கலவரம் அதிமுகவிற்கு பலக்கும் எதிர்ப்பு

சர்க்கார் திரைப்படத்தை காண்பிக்க முடியாதபடி முன்னைய விஜய் படங்களுக்கு கொடுத்த நெருக்கடி போல இம்முறையும் கொடுக்க ஆரம்பித்துள்ளார்கள் தமிழ் நாட்டில்.

முன்னர் அரசியல் கைத்தடி ஒருவரை ஏவிவிட்டு பெற வேண்டிய கப்பத்தை பெற்ற பின் படத்தை காண்பிக்க அனுமதிக்கும் போக்கு இருந்தது என்றும் அது இப்போதும் தொடர்வதாக முக நூல்களில் படிக்க முடிகிறது.

சர்க்காருக்கு எதிராக இப்போது அதிமுக அமைச்சர்களே களமிறங்கியிருக்கிறார்கள். காரணம் படம் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் திட்டங்களை விமர்சிப்பதாகவும் கூறுகிறார்கள்.

எப்படியோ இவர்களின் எதிர்ப்பு திரைப்படத்தின் வருவாயை கூட்டும், மேலும் அதிகமானவரை பார்க்க வைக்கும் என்பதைக்கூட அறியாத பாமரர்களாக இருக்கிறார்களே என்பது இவர்கள் கட்சி ஆதரவாளர் சிலர் கருத்தாக உள்ளது.

எப்படியோ விஜய் எதிர்பார்த்த புயலை சர்க்கார் கிளப்பிவிட்டுள்ளது. எதிர்ப்புக்கள் வராவிட்டால் இப்போது விஜய்க்கு ஆதரவாக கருத்துக் கூறும் கும்பலே அப்படத்தை சரிக்கும் வேலையை அண்டர் கிரவுண்டில் கச்சிதமாக முடுக்கிவிட்டிருக்கும் என்றும் இன்னும் சில கருத்துக்கள் உண்டு.

இந்த நிலையில் சர்க்காருக்கு ஆதரவாக நடிகர்கள் விடுத்துள்ள ஆதரவு கருத்துக்கள் வருமாறு..

முறையாகச்சான்றிதழ் பெற்று வெளியாகியிருக்கும் சர்கார் படத்துக்கு, சட்டவிரோதமான அரசியல் சூழ்ச்சிகள் மூலம் அழுத்தம் கொடுப்பது இவ்வரசுக்கு புதிதல்ல. விமர்சனங்களை ஏற்கத்துணிவில்லாத அரசு தடம் புரளும். அரசியல் வியாபாரிகள் கூட்டம் விரைவில் ஒழியும். நாடாளப்போகும் நல்லவர் கூட்டமே வெல்லும்” என ட்விட்டரில் எழுதியிருக்கிறார் நடிகரும் மக்கள் நீதி மய்யத்தின் கட்சி தலைவருமான கமல்ஹாசன்.

”சர்கார் விமர்சனத்தை எதிர்க்க அரசதிகாரத்தையும், வன்முறையையும் கையாளுபவர்களுக்கு தெரிந்தே இருக்கிறது, இந்த நாட்டில் என்றோ ஜனநாயகம் அழிந்து/இழந்து போய்விட்டது என்று!!!” என ட்வீட் செய்திருக்கிறார் இயக்குநர் பா.ரஞ்சித்.

”தணிக்கைக்குழு தணிக்கை செய்து படத்தை வெளியிட்டபிறகு, அந்தப் படத்திலிருந்து சில காட்சிகளை நீக்கவேண்டும் என்று போராட்டம் நடத்துவதும், திரையிடத் தடுப்பதும், படத்தின் பேனர்களை சேதப்படுத்துவதும், சட்டத்திற்குப் புறம்பான செயல்கள். இத்தகைய செயல்களை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்” என ரஜினிகாந்த் சர்கார் திரைப்பட குழுவுக்கு ஆதரவான கருத்தை தெரிவித்துள்ளார்.

”தணிக்கைக் குழு தணிக்கை செய்த திரைப்படத்தை தணிக்கை செய்ய நினைப்பது சட்டப்படி குற்றம். பிறகு ஏன் தணிக்கை துறை தேவை?” என கொந்தளித்துள்ளார் இசையமைப்பாளரும் நடிகருமான ஜி.வி .பிரகாஷ்.

”தணிக்கை துறை ஒப்புதல் அளித்த ஓர் திரைப்படத்தின் இயக்குநரின் சுதந்திரம் மீது தலையிட்டு வன்முறையை கட்டவிழ்த்து விடும் உரிமையை இவர்களுக்கு வழங்கியது இது. அவர்கள் எவ்வளவு பயந்துபோயிருக்கிறார்கள் அற்ப எண்ணம் கொண்டவர்களாக இருக்கிறார்கள் என்பதை தமிழக குண்டர்களின் செயல்கள் காட்டுகின்றன ” என நடிகையும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவருமான குஷ்பூ தெரிவித்திருக்கிறார்.

”மன்னனை எதிர்த்து கேள்வி கேட்ட வரலாறும், புலவர்கள் வஞ்சப்புகழ்ச்சி செய்த இலக்கியமும் தமிழில் உண்டு. அரசை கேள்வி கேட்பதும் கேலி செய்வதும் எப்போதும் இருந்ததே! இப்போது இல்லாமல் போனது சகிப்புத்தன்மை! ஆயிரம் கைகள் மறைத்தலும் ஆதவன் மறைவதில்லை. தமக்கான ஆதவனை மக்கள் தேர்வுசெய்வர்” என்கிறார் நடிகர் பிரசன்னா.

நேற்றைய தினம் தேவராஜன் என்பவர் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து கைது செய்வதற்காக இயக்குனர் முருகதாஸ் வீட்டிற்கு காவல்துறை சென்றதாக சன் பிக்ச்சர்ஸ் நிறுவனம் தெரிவித்திருந்தது.

அதன்பின்னர், ஏ.ஆர். முருகதாஸ் தனது ட்வீட் ஒன்றின் வாயிலாக ”தாம் வீட்டில் இல்லாததால் தனது வீட்டுக்கு நள்ளிரவில் வந்த போலீசார் வீட்டு கதவை பலமுறை தட்டியபிறகு சென்றுவிட்டதாக என்னிடம் கூறப்பட்டுள்ளது” தெரிவித்திருந்தார்.

இன்று காலை முருகதாஸ் சென்னை உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கேட்டு விண்ணப்பம் தாக்கல் செய்திருந்தார்.

Related posts