தலைசிறந்த 100 உலக சினிமாக்கள் பட்டியலில் ஒரே இந்தியப் படம்

பிபிசி வெளியிட்ட 21-ம் நூற்றாண்டின் தலைசிறந்த 100 உலக சினிமாக்கள் பட்டியலில் ஒரே ஒரு இந்தியப் படம் இடம்பெற்றுள்ளது. அது சத்யஜித்ரேவின் ‘பதேர் பாஞ்சாலி’ ஆகும்.

பிபிசி 21-ம் நூற்றாண்டின் தலைசிறந்த 100 உலக சினிமாக்கள் பட்டியலை வெளியிட்டது. இதற்காக 43 நாடுகளில் இருந்து 209 இயக்குநர்களின் படங்கள் முதல்கட்டமாகத் தேர்வாகின. அவற்றில் இருந்து தலைசிறந்த 100 உலக சினிமாக்கள் தேர்வு செய்யப்பட்டன. இதில் 19 மொழிகள் மற்றும் 24 நாடுகளில் இருந்து 64 இயக்குநர்களின் 100 படங்கள் உள்ளன.

இதில் முதலிடத்தை ஜப்பான் திரைப்படமான அகிரா குரோசவாவின் ‘செவன் சாமுராய்’ பிடித்தது. 27 படங்கள் பிரெஞ்சு மொழியில் இருந்தும் 12 படங்கள் மாண்டரின் மொழியில் இருந்தும் இத்தாலி மற்றும் ஜப்பானிய மொழிகளில் இருந்து தலா 11 படங்களும் இடம்பிடித்துள்ளன.

அதே நேரத்தில் இந்தப் பட்டியலில் ஒரே இந்தியப் படமான சத்யஜித் ரேவின் ‘பதேர் பாஞ்சாலி’ இடம்பெற்றுள்ளது. 1955-ல் வெளியான இந்தப் படம் 15-வது இடத்தில் உள்ளது.

பதேர் பாஞ்சாலி

‘பதேர் பாஞ்சாலி’ ஒரு குடும்பப் படம். வளர்ப்புப் பிராணிகளும் பறவைகளும் மனிதர்களும் ஒருங்கே வாழும் ஒரு குடும்பத்தின் நிகழ்வுகளைச் சித்தரிப்பதன் வாயிலாகப் பல விஷயங்களைத் தழுவிச் செல்லும் படம். ஒரு குடும்பத்தின் வாழ்வினூடே ஒரு தேசத்தை, அதன் குடிமக்களை, இலக்கிய ரசனையை, வளமிழக்கும் கிராம வாழ்வை, நகரத்தில் குழும நேரிடும் சூழலை, ஏழ்மையை… மொத்தத்தில் அக்காலத்தின் சமூக வாழ்வை வெளிச்சத்துக்குக் கொண்டுவருகிறது படம்.

நாடு விடுதலை பெற்று எட்டு ஆண்டுகளுக்குப் பின்னர் வெளியான அந்தப் படம், இந்தியப் படங்களில் இன்று வரையிலும் அரிதாகவே சாத்தியப்பட்ட ஆழத்தைத் தன் இயல்பாகக் கொண்டிருந்தது. 100 உலக சினிமாக்கள் பட்டியலில் பெண்களின் பங்களிப்பு குறைவாக உள்ளது குறித்து ஏமாற்றம் தெரிவித்துள்ள பிபிசி, 4 பெண் இயக்குநர்களின் படங்களே இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவித்துள்ளது.

Related posts