ஜனாதிபதி பிரதமர்கள் இருவர் என்று மூவருமே விசுவாசமற்றவர்கள்

தமிழ் மக்கள் நலன் சார்ந்து தமிழ்த் தரப்பினர்கள் முன்வைக்கின்ற கோரிக்கைகளை மஹிந்த ராஜபக்ஷவோ ரணில் விக்கிரமசிங்வோ ஏற்றுக் கொள்ளவில்லை எனின் இவர்கள் யாருக்கும் ஆதரவளிக்காது நடு நிலைமை வகிப்பதே சிறந்தது என ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

இதனையே என்னுடைய கட்சி செய்யும் எனவும் அதே போன்ற நிலைப்பாட்டையே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் எடுக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர், இலங்கை நாட்டில் தற்போது ஒரு ஆட்சி மாற்றம் ஏற்பட்டிருக்கின்றது. இவ்வாறு ஒரு மாற்றம் ஏற்படப் போகின்றது தொடர்பில் யாருக்குமே எதுவுமே தெரியாது. ஆனாலும் ஐனாதிபதி மைத்திரிபால சிறிசேன அந்த மாற்றத்தை ஏற்படுத்தி முன்னாள் ஐனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை பிரதமராக நியமித்திருக்கின்றார். அதே நேரம் ஐனாதிபதியின் செயற்பாடு தவறானது என்றும் தொடர்ந்தும் தானே பிரதமர் என்றும் ரணில் விக்கிரமசிங்க கூறி வருகின்றார்.

இதனால் நாட்டில் பாரிய நெருக்கடிகள் ஏற்பட்டிருக்கின்றன. இந்நிலையில் மஹிந்த ராஜபக்ஷவும், ரணில் விக்கிரமசிங்கவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம் ஆதரைவக் கோரியிருக்கின்றனர். ஆகையினால் கூட்டமைப்பினர் எத்தகைய முடிவுகளை எடுக்கப் போகின்றனர் என்பது தொடர்பில் பலரும் பார்த்துக் கொண்டிருக்கின்றனர். ஆகவே இந்த நேரத்தில் சரியானதொரு முடிவை தமிழ்த் தரப்புக்கள் எடுக்க வேண்டியது அவசியமாகும்.

ஏனெனில் கடந்த நல்லாட்சி அரசிற்கு நிபந்தனையற்ற ஆதரவை கூட்டமைப்பு வழங்கி எதனைச் சாதித்திருக்கின்றதென்ற கேள்வி இருக்கின்றது. இவ்வாறு கடந்த நான்கு வருடமாக நல்லாட்சி அரசிற்கு ஆதரவாக கூட்டமைப்பு எடுத்த அத்தனை நடவடிக்கைகளும் அல்லது முடிவுகளும் கைநழுவிப் போயுள்ள சூழலையே பார்க்கக் கூடியதாக இருக்கிறது.

ஆகவே தமிழ் மக்களைப் பொறுத்தரைவயில் தீர்க்கப்பட வேண்டிய பல்வேறு பிரச்சினைகள் இருக்கின்றன. ஆகையினால் தமிழ் மக்களின் நலன் சார்ந்தே இதனை அனுக வேண்டிய அவசியமும் தேவையும் ஏற்பட்டுள்ளது. அதற்கமைய தமிழ் மக்கள் நலன் சார்ந்து கோரிக்கைகளை முன்வைக்க வேண்டும். ஐ.நா தீர்மானத்தை நடைமுறைப்படுத்த, வடக்கு கிழக்கில் இராணுவத்தை குறைக்க, வடகிழக்கில் காணிகள் பறிமுதல் செய்யப்படுவதை நிறுத்த, வடக்கு கிழக்கு இணைப்பை ஏற்படுத்த, இனப்பிரச்சினைக்கு தீர்வை ஏற்படுத்த, அரசியல் கைதிகளை விடுதலை செய்ய போன்ற மிக முக்கியமான பிரச்சினைகளுக்கு உத்தரவாதம் அளிக்கப்பட வேண்டுமென்ற கோரிக்கைகளை முன்வைக்க வேண்டும்.

அதனை அவர்கள் ஏற்றுக் கொள்வார்களா இல்லையா என்பதற்கப்பால் மக்கள் நலன் சார்ந்து இதனையே முன்வைக்க வேண்டியிருக்கிறது. இந்த விடயங்களை இருவரில் ஒருவரேனும் ஏற்றுக் கொண்டால் அவரிற்கு ஆதரவளிக்கலாம் என்ற நிலைப்பாட்டை எடுக்கலாம். ஆனால் இதனை யாரும் ஏற்காவிட்டால் இவர்கள் யாருக்கும் ஆதரவளிப்பது அர்த்தமற்றதாகும்.

ஏனெனில் முன்னைய ஆட்சிக்கு ஆதரவளித்து எதுவும் நடக்காதது போல் இனிமேலும் வெறுமனே ஆதரவளித்த எதுவுமே நடக்காத நிலைமை தான் ஏற்படும். ஆகையினால் இவர்கள் யாரும் எமது கோரிக்கைகளை ஏற்றுக் கொள்ளவில்லை என்பதால் எங்களால் இவர்கள் யாருக்கும் ஆதரவளிக்க முடியவில்லை என்பதை சர்வதேச சமூகத்திற்கும் கூறு முடியும்.

ஆகவே இந்த தருணத்திலாவது கூட்டமைப்பு சரியான முறையில் சிந்தித்து தமிழ் மக்களின் நலன்களை முன்னிறுத்தி ஒரு காத்திரமான முடிவுகளை எடுக்க வேண்டும்.

இந்த விடயத்தில் யாருக்கும் ஆதரவளிக்க வேண்டுமென்ற அவசியம் கிடையாது. ஆகையினால் தமிழ் மக்களின் நலன் சார்ந்து முன்வைக்கப்படும் கோரிக்கைகளை ஏற்றுக் கொள்ளாத இரண்டு தரப்பிற்கும் ஆதரவளிக்க வேண்டுமென்ற அவசியமும் இல்லை. அவ்வாறு ஆதரவளிப்பதால் எந்த பயனும் இல்லை. ஆகவே நடு நிலை வகிப்பது தான் சிறந்தது.

இன்றைய நிலையில் அவர்கள் தமது நிறைமைகளை சர்வதேச சமூகத்தினருக்கு கூறியுள்ளனர். அதே போன்று தமிழ்த் தரப்புக்களும் தமது நிலைமைகளை சர்வதேசத்திற்கு கூற வேண்டும். அதாவது தமிழ் மக்கள் நலன்சார்ந்து முன்வைத்த கோரிக்கைகளை அவர்கள் இருவரும் ஏற்றுக் கொள்ளாத காரணத்தால் யாருக்கும் ஆதரவளிக்கப் போவதில்லை என்பதை தெளிவாகக் கூறமுடியும்.

எங்களிடமும் ஒரு பாராளுமன்ற உறுப்பினர் இருக்கின்றார். அவரும் இத்தகைய கோரிக்கைகளையே முன்வைக்கின்றார். இதனை கூட்டமைப்பும் முன்வைக்க வேண்டும். இதனை தனித்து முன்வைக்க வேண்டுமாக இருந்தால் அதனைச் செய்யவும் இது குறித்து யாருடனுமும் பேச வேண்டுமாக இருந்தால் பேசுவதற்கும் நாம் தயாராகவே இருக்கின்றோம்.

ஆகவே இதனையே தமிழ் மக்களின் பிரதிநிதிகளாக இருக்கின்ற கூட்டமைப்பினர் செய்ய வேண்டியது அவசியம். அந்தக் கடமையும் பொறுப்பும் அவர்களுக்கு இருக்கின்றது.

இதே வேளை கடந்த ஐனாதிபதித் தேர்தலின் போது நிறைவேற்றதிகார ஐனாதிபதிமுறை ஒழிக்கப்படும், இனப்பிரச்சனைக்கு தீர்வு காணப்படும், ஊழல் ஒழிக்கப்படும், ஊழல் குற்றவாளிகள் குற்றவாளிக்கூண்டில் நிறுத்தபடுவார்கள் என்று இன்றைய ஐனாதிபதி மைத்திரிபால சிறிசேன வாக்குறுதிகளை வழங்கியிருந்தார். ஆனால் அவற்றுக்கு எல்லாம் இன்றைக்கு என்ன நடந்திருக்கின்றது என்பதை பார்க்க வேண்டும்.

ஏனெனில் நிறைவேற்றதிகார முறைமை ஒழிக்கப்பட வேண்டுமென்பதில் அவருக்கு விருப்பம் இல்லை. இனப்பிரச்சனைகக்கும் தீர்வு வருமென்று எதிர்பார்க்க முடியாது. ஊழலை எதிர்ந்து அதற்கு இடமில்லை என்று கூறி அவர் இன்றைக்கு மஹிந்தவையே மீள கொண்டு வந்திருக்கின்றார்.

ஆகவே ஊழல் பற்றி அவருடைய சிந்தனை என்ன என்ற கேள்வி எழுகின்றது. ஐனாதிபதி மைத்திரிபால சிறிசேன மஹிந்தவிடம் இருந்து ரணிலிடம் வந்தார். தற்போது ரணிலிடம் இருந்து மஹிந்தவிடம் போயிருக்கின்றார். உண்மையில் அவர் யாருக்குமே விசுவாசமில்லை. தமிழ் மக்கள் விடயத்தில் கொஞ்சம் கூட அவருக்கு அக்கறையில்லை. அவரைப் பொறுத்தவரையில் இன்னும் ஒரு தடவை தான் ஐனாதிபதியாக இருக்க வேண்டுமென்பதே நோக்கமாகும். அதற்கமையவே அவர் தன்னுடைய செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றார் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts