ஈழ போராட்டத்திற்கு எந்த அரசும் உறுதுணையாக இல்லை

ஈழத்தில் நடந்த போராட்டத்தில் இந்திய அரசாக இருக்கட்டும் எந்த அரசாக இருக்கட்டும் அவர்கள் உறுதுணையாக இருந்து செயற்பட்டதில்லை. தெரிந்தோ தெரியாமலோ தமிழ்நாட்டில் இருந்து குரல்கொடுக்கிறார்களே ஒழிய அதை அவர்கள் அரசியல் போராட்டமாக நினைக்கிறார்கள். ஒரு இனப்போராட்டமாக மொழிப்போராட்டமாக இந்திய அரசு நினைக்கிறதில்லை என்று இயக்குநர் சிகரம் பாரதிராஜா தெரிவித்துள்ளார்.

யாழ்.ஊடக அமையத்தில் இன்று (15) மாலை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தென்னிந்திய சினிமா இயக்குநர் பாரதிராஜா தெரிவித்துள்ளார்.

அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது, இந்தக் காலச்சூழலில் ஈழம் பற்றி படம் எடுத்தால் கூட என்ன சொல்லுவார்கள் என்றால் இந்திய இராணுவம் இங்கே வந்தது. ஈழத்தமிழர்களுக்கு உறுதுணையாக இல்லை அப்படி சொல்லியாகனும் அதை நியாயப்படுத்தி சொன்னால் அதை ஒத்துக்கமாட்டான். சென்சார் அதை தூக்கிவிடும். அந்த அரசு ஆளுகின்ற வரை விரோதமான செயல்களை நான் வெளிப்படுத்தும் போது அந்தந்த பகுதிகளை தூக்கிவிடுவான். நானும் மொட்டையாக படம் சொல்லனும்.

தலைவர் பிரபாகரனை பார்த்தேன் என்று சொல்லும் போது இவனுக்கு தலைவன் பிரபாகரனா? என்று மாறுபட்ட கண்ணோடு என்னைப் பார்த்து என் செயல்களை எல்லாம் வகுத்துப் பார்த்து என்மீது ஒரு கண் வைத்திருப்பான் நான் நல்லது சொன்னாலும் அதை வெட்டிவிடுவான் ஆளுகின்ற அரசு. உங்களால் உங்கள் கதையை படம் எடுக்க முடியுமா? இலங்கை அரசு அதை வெட்டிவிடும். அதே மாதிரி தான் இதுவும்.

ஈழத்தில் நீங்கள் சந்திக்காத பிரச்சினைகள் இருக்காது உங்கள் பிரச்சினையை வைத்தே ஆயிரக்கணக்கான படங்களை எடுக்க முடியும். தொழில்நுட்பம் கடந்த காலத்தில் நீங்கள் வளர்ச்சியடைவதற்கான சூழல் இல்லை. அறிவும் மூளையும் உலகத்தில் உள்ள தமிழனுக்கு ஒன்றுதான் வாய்ப்புகளும் வசதிகளும் உங்களுக்கு இல்லாத காரணத்தால் எல்லா கற்பனை வளங்களை உள்ளே வைத்துவிட்டு நீங்கள் தேங்கிக்கிடக்கிறீர்கள். ஈழத்தமிழன் நினைத்தால் என்னவெல்லாம் சாதிக்கலாம். உலகம் முழுவதும் ஸ்தாபித்துள்ளான் ஈழத்தமிழன். இலங்கை வானொலியைக் கேட்டு வளர்ந்தவர்கள் நாங்கள். பிரமின் மிகப்பெரிய இலக்கியவாதி இங்கிருந்து வந்தவன். பாலுமகேந்திரா மிகப்பெரிய ஒளிப்பதிவாளர் இங்கிருந்து வந்தவர். எந்தெந்தக் காலம் அந்தந்தக் காலத்துக்கு என்னை மாற்றிக்கொண்டிருக்கிறேன். காலமாற்றத்துக்கு ஏற்ப சிந்தனைகள் மாறும் சூல்நிலைகள் மாறும் என்றார்.

(யாழ். நிருபர் பிரதீபன்)

Related posts