நடிகை கங்கணா ரணாவத் பாலியல் புகார்

பாலிவுட் நடிகர் நானா படேகர் மீது நடிகை தனுஸ்ரீ தத்தா அண்மையில் பாலியல் புகார் கூறினார். படப்பிடிப்பு தளத்தில் நானா படேகர் பாலியல்ரீதியாக துன்புறுத்தியதாக மும்பை போலீஸில் நேற்று முன்தினம் புகார் அளித்தார். இதுகுறித்து விசாரணை நடத்தி வருவதாக மும்பை (மேற்கு) கூடுதல் ஆணையர் மனோஜ் குமார் சர்மா தெரிவித்துள்ளார்.

நடிகை தனுஸ்ரீ தத்தாவுக்கு பல்வேறு பாலிவுட் பிரபலங்கள் ஆதரவு தெரிவித்துள்ளன. நடிகை கங்கணா ரணாவத்தும், தனுஸ்ரீ-க்கு ஆதரவு அளித்துள்ளார். இது தொடர்பாக கங்கணா ரணாவத் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:

தனுஸ்ரீயின் துணிச்சலை பாராட்டுகிறேன். பாலிவுட்டில் நடைபெறும் பாலியல் துன்புறுத்தல்களை எதிர்த்து பெண்கள் துணிச்சலாகப் போராட வேண்டும்.

கடந்த 2014-ம் ஆண்டில் நான் நடித்த ‘குயின்’ படம் வெளியானது. இந்த படத்தின் இயக்குநர் விகாஸ் பகால். இவருக்கு திருமணமாகிவிட்டது. ஆனால் தனது ஆசைக்கு பல்வேறு பெண்களை பலிகடாவாக்கினார்.

என்னுடைய குணம் குறித்து இயக்குநர் விகாஸ் பகாலுக்கு தெரியும். இதனால் என்னை கண்டு சற்று பயப்படுவார். ஆனால் ஒவ்வொரு முறை என்னை முதல்முறை சந்திக்கும்போது மிகவும் இறுக்கமாக கட்டியணைப்பார். எனது கழுத்தில் முகத்தை புதைத்துக் கொள்வார். எனது தலைமுடியை முகர்வார். ஒவ்வொரு முறை சந்திப்பின்போதும் அவரது பாலியல் துன்புறுத்தல்கள் தொடர்ந்தன. அவரது பிடியில் இருந்து விடுபடுவதே பெரும் சவாலாக இருக்கும்.

இயக்குநர் விகாஸ் பகால் குறித்து ஏற்கெனவே ஒரு பெண் பாலியல் புகார் தெரிவித்துள்ளார். அந்த பெண்ணுக்கு நான் ஆதரவாக செயல்பட்டேன். இதன்காரணமாக விகாஸ் பகாலின் புதிய படத்தில் எனக்கு அளிக்க இருந்த வாய்ப்பை அவர் ரத்து செய்துவிட்டார். அதுகுறித்து நான் கவலைப்படவில்லை.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

நடிகை கங்கணா ரணாவத் தமிழில் ‘தாம் தூம்’ என்ற படத்தில் நடித்துள்ளார். தற்போது பாலிவுட்டின் முன்னணி கதாநாயகியாக வலம் வருகிறார்.

Related posts