சாமி படம் பார்க்கப் போய் சாவை தேடிக் கொண்ட பெண்

திரையரங்கில் இருந்த இளைஞரை கவர்ச்சியாக பார்த்தார் என்று மனைவியின் தலையை சுத்தியலால் தாக்கியும் அரிவாளால் துண்டாக்கிய கணவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இந்தியா – தூத்துக்குடியைச் சேர்ந்தவர் 50 வயதான மாரியப்பன். அவரது மனைவி 45 வயதான காளியம்மாள் ஆவார்.

தம்பதிகள் இருவரும் கேரளா – திருவானந்தபுரம் முக்கோலைகால் என்ற இடத்தில் தங்கியிருந்து வியாபாரம் செய்து வருகின்றனர்.

இந் நிலையில் இருவரும் அண்மையில் வெளிவந்த சாமி-2 திரைப்படத்தை பார்க்கச் சென்றுள்ளனர்.

படம் பார்த்துக்கொண்டிருந்த வேளையில் காளியம்மாள் அங்கிருந்த இளைஞர் ஒருவரை கவர்ச்சியாக பார்த்து சிரித்ததாக நினைத்துள்ளார்.

ஆனால் அதனை மாரியப்பன் படம் முடிந்து வீடு செல்லும் வரை காட்டிக்கொள்ளவில்லை.

படம் முடிந்து வீடு திரும்பிய பின்னர் மாரியப்பன் காளியம்மாளிடம் இவ் விடயம் தொடர்பாக விசாரித்துள்ளார்.

காளியம்மாள் மாரியப்பனின் குற்றச்சாட்டை மறுத்துள்ளார்.

இதனால் இருவருக்குமிடையே வாக்குவாதம் முற்றிய நிலையில் ஆத்திரமடைந்த மாரியப்பன் அருகிலிருந்த சுத்தியலால் காளியம்மாளின் தலையில் 4 தடவைகளுக்கு மேல் அடித்துள்ளார்.

சுத்தியலால் அடித்ததால் தலை பிளந்து ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்த காளியம்மாளை அத்தோடு விட்டு வைக்காத மாரியப்பன் அரிவாளால் காளியம்மாளின் தலையை துண்டாக்கிவிட்டு வீட்டை விட்டு தப்பிச் சென்றுள்ளார்.

அயலவரினால் தகவல் வழங்கப்பட்டு சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் காளியம்மாளின் இரண்டு துண்டங்களாகிய உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்தனர்.

ஆரம்ப கட்ட விசாரணைகளை ஆரம்பித்த பொலிஸார் தலைமறைவான மாரியப்பனை நோக்கி வலை விரித்தனர்.

போலிஸாரின் வலையில் சிக்கிய மாரியப்பனை கைது செய்து வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்த பொலிஸாருக்கு அதிர்ச்சிகரமான தகவல் கிடைத்தன.

சந்தேகத்தின் பேரில் தனது மனைவியை எவ்வாறு கொடூரமாக கொலை செய்தார் என மாரியப்பன் விளக்கமாக கூறியுள்ளார்.

பொலிஸாரின் விளக்கமறியலில் உள்ள மாரியப்பனிடம் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இது தொடர்பாக அரசு தரப்பு வழக்கறிஞர்கள் கருத்து தெரிவிக்கையில் மாரியப்பனுக்கு இந்திய கொலை குற்ற வழக்கின் அதிக பட்ச தண்டனை கிடைக்க வாய்ப்புள்ளது என தெரிவித்துள்ளனர்.

Related posts