சிபாரிசு பெறாத டேனியல் பாலாஜி – சில நினைவலைகள்

நடிகர் டேனியல் பாலாஜியின் மறைவு தமிழ் திரையுலகில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவர் குறித்து பலரும் நெகிழ்ந்து வரும் நிலையில், அவர் குறித்த அறியாத சில தகவல்களும் வெளியாகி வருகின்றன. அதில் ஒன்று நடிகர் டேனியல் பாலாஜி மறைந்த நடிகர் முரளியின் தம்பி ஆவார். உடன் பிறந்த தம்பி கிடையாது. டேனியல் பாலாஜி அம்மாவும், மறைந்த நடிகர் முரளியின் அம்மாவும் உடன்பிறந்த சகோரிகள்.

இருவரும் சேர்ந்து நடித்தது கிடையாது. டேனியல் பாலாஜி நடிக்க வந்த சமயத்தில் அவரின் அண்ணன் முரளி தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகன். தன்னுடைய அண்ணன் திரையுலகில் உச்ச கட்டத்தில் இருந்தபோதும்கூட அவரது சிபாரிசு எதுவும் இல்லாமல் வளர்த்திருக்கிறார் டேனியல் பாலாஜி.

இது ஏன் என்றும், நடிகர் முரளி குறித்து டேனியல் பாலாஜி பேட்டி ஒன்றில் கூறுகையில், “நான் பள்ளிக்கூடம் சென்றுகொண்டிருக்கும் போதே முரளி அண்ணன் நடிகராகிவிட்டார். நான் திரைப்படக் கல்லூரியில் படிக்கும்போதெல்லாம் மிகப்பெரிய நடிகர் அவர். அவரை சென்று அடிக்கடி பார்க்கமாட்டேன். சிபாரிசுக்காக அவரை சென்று பார்ப்பேன் என்று யாரவது சொல்லிடுவார்கள் என்பதற்காக அவரைப் பார்ப்பதைத் தவிர்த்து வந்தேன். திரைப்பட கல்லூரியில் படித்து முடித்த பிறகு முரளி அண்ணன் ஒருநாள் என்னை கூப்பிட்டார்.

அப்படி தான் பார்க்க சென்றேன். சிறுவயதில் நாங்கள் ஜாலியாக நிறைய விளையாடியுள்ளோம். அதன்பின் முரளி பெரிய நடிகர் ஆகிவிட்டார். அதனால் அவர் எப்படி என்னை வரவேற்பார் என்பது போன்று எனக்குள் நிறைய கேள்விகள் அவரை சந்திக்கும் முன் இருந்தன. ஆனால், எப்போதும் போலவே முரளி பழகினார்.

அவரது நடிப்பை நான் கிண்டல் அடிப்பேன். ‘வில்லனாக தான் நடிக்க வேண்டுமா’ என்று என்னைப் பார்த்து முரளி கேட்பார். ‘அதான் ஹீரோவாக நடிக்க நீங்கள் இருக்கிறீர்கள்’ என்று நானும் முரளியை கிண்டல் அடிப்பேன்.

முரளி அண்ணனின் அப்பா ஒரு இயக்குநர். கன்னட படங்களில் நிறைய பணியாற்றியுள்ளார். அவர், என்னை இயக்க முடியவில்லை என்று வருத்தப்பட்டுள்ளார். அவர் ஆசைக்காக சில கன்னட படங்களில் நடித்தேன்.” என்று தெரிவித்திருப்பார்.

அவர் கூறியதுபோலவே எந்தவித சிபாரிசு இல்லாமல் பல்வேறு கஷ்டங்களை கடந்து, தமிழ் சினிமாவில் சிறு சிறு கேரக்டர்களில் நடித்து பின்புதான் முன்னணி நடிகர்களுக்கு வில்லனாகும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது.

Related posts