நைரோபியில் பாரிய எரிவாயு வெடி விபத்து

கென்யா தலைநகர் நைரோபியில் இடம்பெற்ற எரிவாயு வெடி விபத்தில் இருவர் கொல்லப்பட்டுள்ளதுடன் 220க்கும் அதிகமானவர்கள் காயமடைந்துள்ளனர்.

எம்பகாசி மாவட்டத்தில் எரிவாயுசிலிண்டர்களுடன் பயணித்துக்கொண்டிருந்த லொறி வெடித்து சிதறியதில் இந்த இழப்புகள் ஏற்பட்டுள்ளன.

பாரிய தீப்பிழம்பு உருவானது என அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

வீடுகள் வர்த்தக நிலையங்கள் வாகனங்கள் சேதமடைந்துள்ளதையும் தொடர்மாடிக்கு அருகில் பாரிய தீப்பிழம்பையும் காண்பிக்கும் வீடியோக்கள் வெளியாகியுள்ளன.

மீட்பு நடவடிக்கைகளிற்காக குறிப்பிட்;ட பகுதியை சுற்றிவளைத்துள்ளதாக தெரிவித்துள்ள பொலிஸார் அந்த பகுதியை தவிர்க்குமாறு பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளனர்.

தீவிபத்து பல தொடர்மாடிகளிற்கு பரவியுள்ளதால் பலர் உயிரிழந்திருக்கலாம் என அச்சம் வெளியாகியுள்ளது.

வெடிப்பு சம்பவத்தின் பின்னர் அதிர்வுகளை உணர்ந்ததாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

வெடிக்கும் எரிவாயு சிலிண்டரிலிருந்து தப்ப முயன்றவேளை நான் காயமடைந்தேன் என ஒருவர் தெரிவித்துள்ளார்.

அது எனக்கு முன்னாள் வெடித்தது அதன் தாக்கம் என்னை கீழே தள்ளிவீழ்த்தியது என்மேல் தீபரவியது அதிஸ்டவசமாக நான் உயிர்தப்பினேன் என பொனிபேஸ் சிபுனா என்பவர் தெரிவித்துள்ளார்.

பாரிய வெடிவிபத்துக்கள் பாரியதீப்பிழம்புகள் மேலும் வெடிப்புகள் இடம்பெறலாம் என்ற அச்சத்தினால் மக்கள் அங்கும் இங்கும் ஓடினர் என நேரில் பார்த்த ஒருவர் தெரிவித்துள்ளார்.

வெடிப்பின் பின்னர் மக்கள் வீடுகளைவிட்டு வெளியேறியுள்ளனர் என பத்திரிகையாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

Related posts