பணம் தந்துவிட்டு ‘துருவ நட்சத்திரம்’ ரிலீஸ்

ஆல் இன் பிக்சர்ஸ் நிறுவனத்திடம் பெற்ற பணத்தை வரும் திங்கள் அல்லது புதன்கிழமைக்குள் திரும்ப செலுத்துவதாகவும், அதன்பின்னர் ‘துருவ நட்சத்திரம்’ படம் வெளியிடப்படும் என்று கவுதம் மேனன் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கி, தயாரித்திருக்கும் “துருவ நட்சத்திரம்” திரைப்படத்தில் விக்ரம் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படம் உலகம் முழுவதும் நாளை (நவ.24) வெளியாக உள்ளது. இந்தப் படத்தை வெளியிட இடைக்கால தடை விதிக்கக்கோரி ஆல் இன் பிக்சர்ஸ் நிறுவனத்தில் பங்குதாரராக உள்ள விஜய் ராகவேந்திரா என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.

அதில், “சிம்புவை நாயகனாக வைத்து “சூப்பர் ஸ்டார்” என்ற படத்தை இயக்குவதற்காக, கவுதம் வாசுதேவ் மேனன் தங்களது நிறுவனத்துடன் ஒப்பந்தம் போட்டார். அதற்கு முன்பணமாக கடந்த 2018-ம் ஆண்டு 2 கோடியே 40 லட்சம் ரூபாய் அளிக்கப்பட்டது. அந்த ஒப்பந்தப்படி அந்த பட வேலைகள் நடைபெறாத நிலையில் வாங்கிய முன்பணத்தை இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனன் திருப்பித் தரவில்லை. எனவே எங்களிடம் பெற்ற தொகையை திருப்பி அளிக்காமல் துருவ நட்சத்திரம் படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும்” என மனுவில் கோரியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், இன்று (நவ.24) காலை 10.30 மணிக்குள் 2 கோடியே 40 லட்ச ரூபாய் பணத்தை திருப்பி அளிக்க வேண்டும் என கவுதம் வாசுதேவ் மேனனுக்கு நிபந்தனை விதித்திருந்தது. அவ்வாறு பணத்தைக் கொடுக்கவில்லை என்றால் ‘துருவ நட்சத்திரம்’ படத்தை இந்தியா மற்றும் வெளிநாடுகள் என எங்கும் வெளியிடக் கூடாது என உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில், இந்த வழக்கு வெள்ளிக்கிழமை மீண்டும் நீதிபதி சி.சரவணன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது கவுதம் மேனன் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், “பணத்தை திரும்ப செலுத்தவில்லை என்பதால் படத்தை வெளியிடவில்லை. திங்கள் அல்லது புதன்கிழமைக்குள் பணத்தை திரும்ப செலுத்திவிட்டு படத்தை வெளியிட உள்ளோம்” என்ரு தெரிவித்தார். இதையடுத்து, இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, விசாரணையை வரும் நவம்பர் 27-ம் தேதிக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டார்.

Related posts