மன்சூர் அலிகான் விவகாரத்தில் த்ரிஷா பதிவு

தான் கூறிய சர்ச்சை கருத்துகளுக்கு நடிகர் மன்சூர் அலிகான் மன்னிப்பு கேட்ட நிலையில், நடிகை த்ரிஷா தனது எக்ஸ் தள பக்கத்தில், “தவறு செய்வது மனித குணம்; மன்னிப்பது தெய்வீக குணம்” என பதிவிட்டுள்ளார்.

சமீபத்தில் வெளியான வீடியோ ஒன்றில் பத்திரிகையாளரின் கேள்விக்கு பதிலளித்த மன்சூர் அலிகான், நடிகை த்ரிஷா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருந்தார்.

இந்தப் பேச்சுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. இந்த விவகாரத்தில் மன்சூர் அலிகான் மீது நடவடிக்கை எடுக்குமாறு தமிழக டிஜிபிக்கு தேசிய மகளிர் ஆணையம் பரிந்துரை செய்திருந்தது.

இதனையடுத்து சென்னை ஆயிரம் விளக்கு காவல் துறையினர் நடிகர் மன்சூர் அலிகான் மீது இரு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர்.

மேலும் விசாரணைக்கு நேரில் ஆஜராக கோரி அவருக்கு ஆயிரம் விளக்கு மகளிர் போலீஸார் சம்மன் அனுப்பினர். வழக்கு விசாரணைக்கு மன்சூர் அலிகான் நேரில் ஆஜராகியிருந்தார்.

அப்போது போலீசாரிடம், “த்ரிஷாவை ஒரு நடிகையாக மதிக்கிறேன்” என தெரிவித்ததாக கூறினார்.

இதனையடுத்து இன்று “எனது சக திரைநாயகி த்ரிஷாவே என்னை மன்னித்துவிடு” என கூறி அறிக்கை வெளியிட்டு மன்னிப்பு கோரியுள்ளார்.

இந்நிலையில், அவருக்கு பதிலளிக்கும் விதமாக நடிகை த்ரிஷா தனது எக்ஸ் தள பக்கத்தில், “தவறு செய்வது மனித குணம், மன்னிப்பது தெய்வீக குணம்” என பதிவிட்டு இந்த பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

Related posts