சொந்தக்காலில் நிற்க மாணவர்கள் பயிற்றுவிக்கப்பட வேண்டும்

வெளிநாட்டில் உள்ளவர்களை நம்பியிருந்தால் எமது நாடு வளம் பெறாது. தொழில்நுட்பம் சார்ந்து உழைக்க கற்றுக்கொண்டு சொந்தக்காலில் நிற்க வேண்டும். அதற்காக மாணவர்கள் பயிற்சியளிக்கப்பட வேண்டும் என்ற கருத்தினை சுவாமி விபுலானந்தர் வலியுறுத்திவந்துள்ளதாக மட்டக்களப்பு இராம கிருஷ்ணமிஷனின் பொது முகாமையாளர் ஸ்ரீமத் சுவாமி நீல மாதவானந்தாஜி மஹராஜ் தெரிவித்தார்.

உலகின் முதல் தமிழ் பேராசிரியர் என்ற பெருமையினைக் கொண்ட முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்தரின் 132வது ஜனன தினம் மட்டக்களப்பில் இன்று (03) அனுஷ்டிக்கப்பட்டது.

சுவாமி விபுலானந்தர் நூற்றாண்டு விழா சபையினரின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு கல்லடியில் உள்ள சுவாமி விபுலானந்தரின் சமாதியில் நடைபெற்றது.

மட்டக்களப்பு இராம கிருஷ்ணமிஷனின் பொது முகாமையாளர் ஸ்ரீமத் சுவாமி நீல மாதவானந்தா ஜி மஹராஜ் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் சுவாமி விபுலானந்தர் நூற்றாண்டு விழாச் சபையின் தலைவர் கே.பாஸ்கரன் மற்றும் சிவானந்தா தேசிய பாடசாலையின் அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள், விவேகானந்தா மகளிர் கல்லூரியின் ஆசிரியர்கள், மாணவர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

இதன்போது சமாதியில் சுவாமிக்கு விசேட பூஜைகள் நடைபெற்று, மலர்மாலை அணிவிக்கப்பட்டு வழிபாடுகளும் முன்னெடுக்கப்பட்டன.

இந்த நிகழ்வின்போது விசேடமாக சுவாமி விபுலானந்தரின் “வெள்ளை நிற மல்லிகையோ வேறெந்த மாமலரோ…” பாடல் பாடப்பட்டு வழிபாடுகள் முன்னெடுக்கப்பட்டன.

இந்த ஆண்டு சுவாமி விபுலானந்தரின் துறவறத்தின் நூற்றாண்டு நிகழ்வாக அனுஷ்டிக்கப்படவுள்ளதுடன், அவர் எழுதிய நூல்களை மீண்டும் வெளியிடுவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு இராம கிருஷ்ணமிஷனின் பொது முகாமையாளர் ஸ்ரீமத் சுவாமி நீல மாதவானந்தா ஜி மஹராஜ் இதன்போது தெரிவித்தார்.

Related posts