பெரிய பட்ஜெட் படங்களால் திரைத்துறைக்கு சேதம்

பெரிய பட்ஜெட் படங்கள் திரைத்துறைக்கு பெரும் சேதத்தை ஏற்படுத்துவதாக பாலிவுட் நடிகர் நவாசுதீன் சித்திக் தெரிவித்துள்ளார்.
தனியார் ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியுள்ளதாவது:
பெரும் பொருட்செலவில் உருவாகும் படங்கள்தான் திரைத்துறையின் வீழ்ச்சிக்கு காரணம். கதை, திரைக்கதை, நடிப்பு அனைத்தும் அவற்றில் வெற்றிடங்களாக உள்ளன. இந்த படங்கள் சினிமாத் துறைக்கு பெரும் சேதத்தை ஏற்படுத்துகின்றன. ஏதோவொரு காரணத்தால் அரிதான ஒரு சில படங்கள் பாக்ஸ் ஆபீஸில் ஹிட் ஆகின்றன. ஆனால், அந்த 3 சதவீத படங்களை தவிர்த்து விட்டு பார்த்தால் மீதமிருக்கும் 97 சதவீத படங்களும் தோல்வி அடைகின்றன. இவை அனைத்தும் பெரிய பட்ஜெட் படங்கள்.
இந்த படங்களில் கதை, நடிப்பு என எதுவும் இருப்பதில்லை. அவற்றில் 5 பாடல்கள் இருக்கின்றன. அவற்றை நடன இயக்குநர்கள் கவனிக்கின்றனர். சில ஆக்‌ஷன் காட்சிகள் இருக்கின்றன. அவற்றை ஸ்டன்ட் இயக்குநர்கள் கவனிக்கின்றனர். படத்தில் இயக்குநருக்கு என்ன வேலை? நடிகருக்கு என்ன வேலை?
மக்கள் பார்க்க விரும்பாத படங்களுக்கு ரூ.100 கோடி செலவு செய்கின்றனர். அவற்றில் ஒன்றும் இல்லாததால் அவை தோல்வி அடைகின்றன. ஒரு நல்ல நடிகனை வைத்து வெறும் ரூ.50 கோடியில் இவர்கள் ஒரு படம் எடுப்பதில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
கரோனாவுக்கு பின் வெளியான பாலிவுட் படங்களில் ஷாரூக் கானின் ‘பதான்’ தவிர்த்து வேறு எந்த பெரிய பட்ஜெட் படங்களும் சொல்லிக் கொள்ளும்படி வெற்றியடையவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts