மன்னாரில் 111,000 போதை மாத்திரைகள்

மன்னார் இராணுவப் புலனாய்வுப் பிரிவினரும் மன்னார் ஊழல் ஒழிப்பு பிரிவுனரும் இணைந்து மேற்கொண்ட நடவடிக்கையின்போது சுமார் ரூபா 16 மில்லியன் (ரூ. 1 கோடி 60 இலட்சம்) பெறுமதியான போதை மாத்திரைகளை மீட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
சிலாவத்துறை பகுதியில் குறித்த போதை மாத்திரைகள் மீட்கப்பட்டுள்ளன.நேற்றுமுன்தினம் (13) வியாழக்கிழமை மன்னார் இராணுவப் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின்படி மன்னார் ஊழல் ஒழிப்புப் பிரிவுனர் இராணுவப் பிரிவினருடன் இணைந்து மன்னார் சிலாவத்துறை நாவாந்தலுவத்தை எனும் காட்டுப் பகுதியை சுற்றிவளைத்து மேற்கொண்ட தேடுதல் வேட்டையின்போது குறித்த போதை மாத்திரை தொகை கண்டுப்பிடித்து கைப்பற்றப்பட்டுள்ளன.
இந்தியாவிலிருந்து சட்டவிரோதமாக கொண்டு வரப்பட்டதாகக் தெரிவிக்கப்படும் சுமார் 16 மில்லியன் ரூபா பெறுமதியான 111,000 போதை மாத்திரைகளே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
இவ்வாறு மீட்கப்பட்ட போதை மாத்திரைகள் தொடர்பாக எவரும் இதுவரை கைது செய்யப்படவில்லை எனவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக மன்னார் பிரதேச ஊழல் ஒழிப்பு பிரிவினர் பொலிசாருடன் இணைந்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

Related posts