நடிகர்களுக்கு இணையாக நடிகைகளுக்கும் சம்பளம்

தமிழில் ரஜினிகாந்த் ஜோடியாக கபாலி, கார்த்தியுடன் ‘ஆல் இன் ஆல் அழகுராஜா’ மற்றும் ‘சித்திரம் பேசுதடி-2’, ‘வெற்றிச் செல்வன்’ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள ராதிகா ஆப்தே, இந்தி திரையுலகில் அதிக படங்களில் நடித்து பிரபல நடிகையாக இருக்கிறார்.

இந்த நிலையில் ராதிகா ஆப்தே அளித்துள்ள பேட்டியில், “சினிமா துறையில் பணியாற்றும் நடிகைகளுக்கும், மற்ற பெண்களுக்கும் சம்பளம், பெயர், புகழ் அனைத்திலும் நடிகர்களுக்கு இணையாக சம உரிமை வேண்டும்.

இதற்காக சினிமாத்துறையில் பெண்கள் தீவிர முயற்சி செய்து வருகிறார்கள். இது வரவேற்கத்தகுந்த விஷயம். பெண் முக்கியத்துவம் உள்ள படங்கள் அதிகம் வருகின்றன. இதன் மூலம் கதாநாயகிகளுக்கு, ஹீரோக்களுக்கு சமமான முக்கியத்துவம் கிடைக்கிறது.

இது மகிழ்ச்சி அளிப்பதாக உள்ளது. இதற்காகத்தான் இந்தி சினிமாவில் பணியாற்றும் பெண்கள் போராடி வந்தனர். தற்போது உலகம் மொத்தமும் மாறிவிட்டது. அனைத்துத் துறையிலும் ஆண், பெண் வித்தியாசம் இல்லை என்ற நிலைமை இருக்கிறது. பெண்கள் சமத்துவத்திற்காக போராடுகிறார்கள்.

சமூகத்தின் பிரதிபிம்பமாக இருக்கும் சினிமா துறையிலும் சமத்துவத்தை அமல்படுத்த வேண்டும்” என்றார்.

Related posts