பொத்துவில் தொடங்கி பொலிகண்டி வரை

பொத்துவில் தொடங்கி பொலிகண்டி வரையான அகிம்சை வழி போராட்டம் நடைபெற்று வரும் நிலையில் சாவகச்சேரி நீதிவான் நீதிமன்ற நியாயாதிக்க எல்லைக்குள் ஆர்ப்பாட்டங்கள், பேரணிகளை நடத்த தடை உத்தரவு கோரி பொலிஸார் தாக்கல் செய்த விண்ணப்பம் நீதிமன்றினால் நிராகரிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், மல்லாகம் நீதிவான் நீதிமன்றத்தில் சுன்னாகம், காங்கேசன்துறை மற்றும் அச்சுவேலி பொலிஸார் முன்வைத்த விண்ணப்பங்களும் நீதிமன்றினால் நிராகரிக்கப்பட்டுள்ளது.

சாவகச்சேரி நீதிவான் நீதிமன்றில் சாவகச்சேரி மற்றும் கொடிகாமம் பொலிஸார் தாக்கல் செய்த விண்ணப்பமே நிராகரிக்கப்பட்டுள்ளது.

பொதுத் தொல்லையை ஏற்படுத்தல், கோவிட் -19 சுகாதார நடைமுறைகளை மீறுதல் உள்ளிட்ட சட்ட ஏற்பாடுகளின் கீழ் இந்த விண்ணப்பங்கள் யாழ்ப்பாணம் மற்றும் கோப்பாய் பொலிஸாரால் தனித்தனியே தாக்கல் செய்யப்பட்டன

ஜெனிவா மனித உரிமைகள் சபையின் கூட்டத்தொடர் இடம்பெறவுள்ள நிலையில் நாட்டுக்கு சதி ஏற்படுத்தும் முயற்சியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் முயற்சிக்கின்றனர் என்று பொலிஸார் நீதிமன்றில் எடுத்துரைத்தனர்.

“இலங்கை அரசியலமைப்பில் வழங்கப்பட்டுள்ள ஒன்றுகூடும் உரிமையை பொலிஸாரின் தடை உத்தரவு கோரிக்கை மறுக்கின்றது. அத்துடன், ஒரு இனம் நாட்டுக்கு சதி செய்வதாக பொலிஸார் எண்பிப்பது ஏனைய இனங்களுக்கு வெறுப்புணர்வைத் தூண்டும். கோவிட்-19 தொற்றுநோய் தொடர்பில் பேரணி இடம்பெறும் இடங்கள் தனிமைப்படுத்தப்படவில்லை. அதனால் பொலிஸார் தாக்கல் செய்த அடிப்படையற்ற விண்ணப்பத்தை நிராகரிக்க வேண்டும்” என்று சட்டத்தரணி கேசவன் சயந்தன், நீண்ட சமர்ப்பணத்தை முன்வைத்தார்.

இருதரப்பு விண்ணப்பங்களையும் ஆராய்ந்த சாவகச்சேரி நீதிவான் பொலிஸாரின் தடை உத்தரவு கோரிக்கையை நிராகரித்து உத்தரவிட்டார்.

இதேபோன்று மல்லாகம் நீதிவான் நீதிமன்றில் நேற்றுமுன்தினம் சுன்னாகம், காங்கேசன்துறை மற்றும் அச்சுவேலி பொலிஸார் தாக்கல் செய்த பேரணிக்கான தடை உத்தரவு விண்ணப்பங்கள் இன்று விசாரணைக்கு வந்தன.

மூத்த சட்டத்தரணிகள் என்.சிறிகாந்தா, வி.திருக்குமரன் மற்றும் சட்டத்தரணிகள் முன்னிலையாகி ஆட்சேபனை தெரிவித்து நீண்ட சமர்ப்பணத்தை முன்வைத்தனர்.

பொலிஸாரின் விண்ணப்பம், சட்டத்தரணிகளின் ஆட்சேபனையை ஆராய்ந்த மல்லாகம் நீதிமன்ற நீதிவான் ஏ.ஏ.ஆனந்தராசா, பொலிஸாரின் விண்ணப்பங்களை நிராகரித்து கட்டளை வழங்கினார்.

தமிழ் பேசும் மக்களின் பூர்வீக நிலங்கள் உள்பட இலங்கை முழுவதும் திட்டமிட்டு நடாத்தப்படும் இன அழிப்பு நடவடிக்கைகளுக்கு எதிராகவும், ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவைக்கு வடகிழக்கு தமிழ் கட்சிகள் மற்றும் சிவில் சமூக அமைப்புகள், பல்சமய ஒன்றியங்கள் இணைந்து அனுப்பி வைக்கப்பட்ட கோரிக்கைகளை நடைமுறை படுத்த கோரியும், மலையக தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த வேதனத்தை ஆயிரம் ரூபாயாக உயர்த்தக் கோரியும் முஸ்லிம் மக்களின் மத நம்பிக்கைகளை மதிக்கக் கோரியும் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது.

இந்தப் போராட்டம் மூன்றாம் நாளான இன்று காலை திருகோணமலையில் ஆரம்பமாகி நடைபெற்றுவருகிறது. நாளைமறுதினம் ஞாயிற்றுக்கிழமை பொலிகண்டியை வந்தடையும் என்பது குறிப்பிடத்தக்கது.

-யாழ். நிருபர் பிரதீபன்-

—–
திருகோணமலை நகரில் சிவன் கோயில் முன்றலில் இன்று (05) காலை 8.30 மனி அளவில் தொடர்ந்த பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான நடைபவணி நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமேந்திரன் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் நடைபவனி குறித்து கருத்து தெரிவிக்கையில், இந்த அரசின் சிறுபான்மை மக்களுக்கான எதிரான நடவடிக்கையை கண்டித்தும் சிறுபான்மை மக்களின் உரிமைகளை பெற்றுக்கொள்வதற்கும், இந்த பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான நடைபவனி நடைபெறுகின்றது எனவும், அது சிங்கள மக்களுக்கு எதிரானதாக இல்லை என்றார்.

மேலும், 10 கோரிக்கைகளை முன்வைத்து இந்த பவனி நடைபெறுவதாகவும் வடகிழக்கின் தெற்கு முனையில் இருந்து வடமுனையை நோக்கிய நிலையில் பயணம் தொடர்கின்றது. இந்த நடைபவனியை நிறுத்துவதற்கு அரசாங்கம் பலமுனைகளிலும் முயற்சித்தது எனினும் பொத்துவில் முதல் திருகோணமலை வரைக்கும் வரமுடிந்துள்ளது.

இந்நாட்டில் சிங்கள பௌத்த மக்களுக்கு இருக்கும் சகல உரிமைகளும் தமிழ் பேசும் மக்களாகிய எங்களுக்கும் உண்டு. ஏனெனில் நாங்களும் இந்நாட்டின் குடிமக்கள் என்றாலும் நேற்று ஜனாதிபதி சுதந்திரதின நிகழ்வில் பேசும் போது, நான் சிங்கள பௌத்தன் என்று தெரிவித்தார். எனினும் அது இங்களுக்கு பிரச்சினை இல்லை. ஆயினும் இந்நாட்டின் ஜனாதிபதி நான் சிங்கள மக்களுக்கும் மாத்திரம் சேவையாற்றுவேன் என்று தெரிவிப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது.

எங்களுக்கும் இந்நாடு சொந்தமானது நாங்களும் வசிக்கின்றோம். அதோபோல் சிங்கள மக்களும் இந்நாட்டில் வசிப்பதற்கான உரிமை உள்ளது. எங்களின் உரிமைகளை அகற்றமுடியாது. இதன் அடிப்படையில் நாங்கள் இந்த நடைபவனியை மேற்கொள்கின்றோம்.

ஆயினும் இந்த நடைபவனி ஆரம்ப நாள் முதல் இதனை நிறுத்துவதற்கு பல்வேறு பகுதிகளில் நீதிமன்ற உத்தரவைபெற்று நடைபவனியை நிறுத்துவதற்கு இந்த அரசாங்கம் முயற்சித்தது. ஆனால், இன்று பொலிஸாரையும் போக்குவரத்து பொலிஸாரையும் இந்த இடத்தில் நிறுத்தி வைத்து இப்போது எந்த எதிர்ப்புத் தன்மையையும் அவர்கள் காட்டவில்லை. எனக்கு எதிராகவும் சில பிரதேச நீதிமன்றங்களில் தடை உத்தரவு பெறபட்டதாக அறிந்தேன். ஆனால் எனது கைகளில் ல் அது கிடைக்கப்பெறவில்லை. அரசாங்கம் எவ்வழிகளிலும் முயற்சித்தாலும் எனது நடைபவனி தொடரும் என சுமேந்திரன் தெரிவித்துள்ளார்.

-திருகோணமலை நிருபர் கீத்-

Related posts