இலங்கையில் இன்று 31.07.2020 காலை

கட்சியில் இருந்து பிரிந்து சென்ற யாரும் உண்மையான ஐக்கிய தேசிய கட்சியினராக இருக்க முடியாது என ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று (30) இடம்பெற்ற மக்கள சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கத்தில் மாத்திரமே மூன்று வேளைகள் உண்ண முடியும் எனவும் அதற்காகவே ஐக்கிய தேசிய கட்சியை மீண்டும் ஆட்சிக்கு கொண்டுவர வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசிய கட்சியினால் மாத்திரமே நாட்டை காப்பற்ற முடியும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

——–

தற்போதைய அரசாங்கத்தினால் மக்கள் இழந்துள்ள சலுகைகளை தன்னுடைய அரசாங்கத்தின் கீழ் 24 மணித்தியாலங்களுக்குள் வழங்குவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

மஹரகம பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

பொருளாதாரம் மீண்டும் கட்டமைக்கப்படும் வரை ஒரு மாதத்திற்கு 20,000 ரூபா நிச்சயமாக வழங்குவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

——-

நிட்டம்புவ பகுதியில் கருக்கலைப்பு நிலையம் ஒன்றை நடத்திச் சென்ற போலி வைத்தியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நேற்று மமாலை 5 மணியளவில் குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

40 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபரிடம் இருந்து கருக்கலைப்பிற்காக பயன்படுத்தும் உபகரணங்கள் சிலவும் வேன் ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் நிட்டம்புவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

—–

பணி நீக்கம் செய்யப்பட்டுள்ள முன்னாள் குற்றப்புலனாய்வு திணைக்கள பணிப்பாளர் ஷானி அபேசேகர கைது செய்யப்பட்டுள்ளார்.

கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

—–

ரணில் மற்றும் சஜித் அணிகள் அரங்கேற்றுவது ஒரு நாடகமாகும். தேர்தலின் பின்னர் இருதரப்பினரும் இணைந்துக் கொள்வரென ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கொழும்பு மாவட்ட வேட்பாளரும், பிவிதுரு ஹெல உருமய கட்சியின் தலைவருமான உதய கம்மன்பில தெரிவித்தார்.

கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார்.

அவர் மேலும் கருத்து வெளியிடுகையில்,

ஐக்கிய மக்கள் சக்தியில் போட்டியிடுவதால் பலரை ஐ.தே.க. கட்சியைவிட்டு நீக்கியுள்ளது. நீக்கப்பட்டுள்ளவர்களின் பெயர் பட்டியலை மேலிருந்து கீழாகவும் கீழிருந்து மேலாகவும் நன்கு பரிசீலித்தோம். அதில் சஜித் பிரேமதாசவின் பெயர் எங்கும் இல்லை. ரணில் – சஜித் பிளவு என்பது பொய்யான விடயம். இவர்கள் மக்களை ஏமாற்றுகின்றனர்.

Related posts