CID என கூறி ரூ. 29 இலட்சம் பணம்; 42 பவுண் நகை கொள்ளை

தம்மை CID என அடையாளப்படுத்தி வீடொன்றில் நகை மற்றும் பணம் கொள்ளையிட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த செவ்வாய்க்கிழமை (11) அலவத்துகொடை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பட்டுகொட பகுதியில் உள்ள வீடொன்றிற்கு, ஆயுதமொன்று மற்றும் கைவிலங்கு ஆகியவற்றுடன் வந்த 6 பேர் கொண்ட குழுவினர், வீட்டிலுள்ளவர்களை பயமுறுத்தி பணம் மற்றும் நகைகளை கொள்ளையடித்தமை தொடர்பில் அலவத்துகொடை பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கமைய குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதன்போது வீட்டிலிருந்த பொருட்களை சோதனையிட்ட குறித்த நபர்கள் ரூபா 29 இலட்சத்து 25 ஆயிரம் (ரூ. 2,925,000) பணம் மற்றும் ரூபா 25 இலட்சத்து 20 ஆயிரம் பெறுமதியான 42 பவுண் தங்க நகைகளை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.

அதற்கமைய மேற்கொண்ட விசாரணைகளின் அடிப்படையில், சந்தேகநபர் ஒருவர் நேற்றையதினம் (15) வேன் ஒன்றுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட 37 வயதான சந்தேகநபர் கிராகடுவ, ஜம்புகஹபிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளதோடு, இன்று (16) அவரை கண்டி நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Related posts