இன்று தளபதிக்கு தடை.. நாளை இலங்கை அதிபர் !

அமெரிக்காவிற்குள் நுழைய, இலங்கை ராணுவ தளபதிக்கு தடை விதிக்கப்பட்டது போல், அதிபர் கோத்தபயா ராஜபக்சே மீதும் அமெரிக்கா தடை விதிக்கலாம்’ என, பவுத்த மத பிரிவான அஸ்கிரிய குழு கண்டனம் தெரிவித்துள்ளது.

இலங்கையில், 2009-ம் ஆண்டு நடைபெற்ற உள்நாட்டுப் போரின் இறுதிக் கட்டத்தில், வடக்கு பிராந்திய ராணுவப் படைக்குத் தலைமை தாங்கியவர் ஷவேந்திர சில்வா. அந்தப் போரில் நீதிக்குப் புறம்பான கொலைகள், மனித உரிமை மீறல்கள் போன்ற செயல்களில் ஈடுபட்டதாக, சில்வா மீது ஐ.நா., சபை குற்றம் சாட்டியுள்ளது.

இந்நிலையில், கடந்த ஆண்டு, இலங்கையின் ராணுவ தளபதியாக சில்வா நியமிக்கப்பட்டார். இவரின் நியமனத்துக்கு, அமெரிக்காவும் ஐ.நா., சபையும் எதிர்ப்பு தெரிவித்திருந்தன. ‘இவரால் இலங்கைக்கு பெரும் அபாயம் நேரிடும்’ என்றும் எச்சரித்தன.

கடந்த 14ம் தேதி, அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செயலர் மைக் போம்போ தன் டுவிட்டர் பக்கத்தில், ‘இலங்கையின் உள்நாட்டுப் போரின்போது, நீதிக்குப் புறம்பான கொலைகளில் ஈடுபட்டதால், ஷவேந்திர சில்வாவுக்கு அமெரிக்காவிற்குள் நுழையத் தடை விதிக்கப்பட்டுள்ளது’ என, குறிப்பிட்டிருந்தார்.

இதற்கு, ‘ஷவேந்திர சில்வா விவகாரத்தில் அமெரிக்கா தன் முடிவை மறு பரிசீலனை செய்ய வேண்டும்’ என, இலங்கை அரசு கேட்டுக்கொண்டுள்ளது.

இந்நிலையில், இலங்கையில் உள்ள, பவுத்த மத பிரிவான அஸ்கிரிய குழு, விடுத்துள்ள அறிக்கையில், ‘இலங்கை மீது அமெரிக்கா செலுத்தி வரும் அழுத்தத்தை வன்மையாக கண்டிக்கிறோம். ராணுவத் தளபதி ஷவேந்திர சில்வாவை அமெரிக்காவிற்குள் நுழைய தடை விதித்துள்ளது இந்த அழுத்தத்தின் வெளிப்பாடு தான். இந்நிலை தொடர்ந்தால், இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே மீதும் எதிர்காலத்தில் அமெரிக்கா இவ்வாறான தடையை விதிக்க வாய்ப்புள்ளது’ என, தெரிவித்துள்ளது.

இலங்கை அரசிற்கு ஆலோசனை வழங்கும் பவுத்த மத பிரிவான அஸ்கிரிய குழுவின் அறிக்கையால், சில்வா விவகாரத்தில் அமெரிக்காவுக்கு கண்டனம் தெரிவிக்கும் நெருக்கடி, இலங்கை அரசிற்கு ஏற்பட்டுள்ளதாக, எதிர்க்கட்சிகள் தெரிவித்துள்ளன.

Related posts