யார் எதைக் கூறினாலும் தேர்தலில் களமிறங்குவேன்

யார் என்னதான் கூறினாலும் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் நான் கட்டாயம் போட்டியிடுவேன் என ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவரும் அமைச்சருமான சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.

ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் வீரகெடிய பிரதேச செயலகப் பிரிவில் முலன்யாய கிராமத்தில் நிர்மாணித்த மாதிரிக்கிராமங்களை பொதுமக்களுக்கு கையளிக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அமைச்சர் இங்கு தொடர்ந்து உரையாற்றுகையில், இன்று ஊடகங்களை அவதானித்தால் அனைவருடைய கேள்வியும் சஜித் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவாரா? இல்லையா என்பதாகும். யார் என்னதான் கருத்துக்களை தெரிவித்து முட்டுக்கட்டைகளை போட்டாலும் நான் இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் கட்டாயமாக போட்டியிடுவேன் என்பதை அவர்களுக்கு தெரிவித்துக் ெகாள்கிறேன்.

எமது நாட்டிலுள்ள சகல மக்கனினதும் இன, மத,மொழி மற்றும் கட்சி வேறுபாடுகளின்றி அனைத்து மக்களினதும் ஆசீர்வாதத்துடனும் ஆதரவுடனும் நான் இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் களமிறங்குவேன். இது மாத்திரமன்றி இவர்களது ஆசீர்வாதத்துடன் அதில் கட்டாயமாக வெற்றியும் பெறுவேன். தற்பொழுது சஜித் பிரேமதாஸவின் காலமே உருவாகியுள்ளது.

தாமரைமொட்டுவின் பெரியவர்களும் சஜித் பிரேமதாஸவிற்கு வாழ்க்கையில் ஒருபோதும் அபேட்சகராக வரமாட்டார் என நாடு பூராவும் சுத்தித்திரிந்து கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

இவர்கள் இவ்வாறு தெரிவிப்பது புதுமை அல்ல. நான் வந்தால் எதிர்த் தரப்பினரை விடவும் மக்களுக்கு கூடுதல் சேவைகளை செய்வேன் என்ற அச்சமாகும். நாட்டு மக்களுக்காக நான் சகலதையும் அர்ப்பணித்துள்ளேன் என்றார்.

Related posts