புங்குடுதீவில் 300 கி.கி.; மயிலிட்டியில் 95 கி.கி. கஞ்சா மீட்பு

யாழ்ப்பாணம், புங்குடுதீவு கடற்பரப்பில் மேற்கொள்ளப்பட்ட ரோந்துப் பணியின் போது சுமார் 300 கிலோகிராம் கேரள கஞ்சாவை கடற்படையினர் மீட்டுள்ளனர்.

இன்று (02) காலை குறித்த பிரதேசத்தில் தரித்து நின்ற சந்தேகத்திற்கிடமான டிங்கி படகொன்றை டிங்கிப் படகொன்றை சோதனையிட்டபோது அதில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் 300 கிலோ கேரள கஞ்சா கண்டுபிடிக்கப்பட்டதாக, கடற்படையின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ள்ளது.

இதன்போது டிங்கி படகில் இருந்த இரண்டு சந்தேக நபர்களை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

சந்தேக நபர்கள் வழங்கிய தகவல்களின் அடிப்படையில், யாழ்ப்பாணம், சங்குபிட்டி பகுதியில் மேலும் இரு போதைப்பொருள் கடத்தல்காரர்களை கடற்படையினர் கைது செய்யுள்ளனர்.

கைப்பற்றப்பட்ட கேரள கஞ்சாவை, மேலதிக விசாரணைகளுக்காக யாழ்ப்பாண போதைப்பொருள் தடுப்பு பிரிவிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை நேற்றையதினம் (01) காங்கேசன்துறை, மயிலிட்டி மீன்பிடி துறைமுகத்திற்கு முன்னாலுள்ள கடற்பகுதியில் வைத்து, கடற்படையினர் மேற்கொண்ட கண்காணிப்பு நடவடிக்கையின்போது, நீரில் மிதந்தவாறு காணப்பட்ட 95.4 கிலோ கிராம் கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.

20 பொதிகளில் பொதி செய்யப்பட்டு, இரு உரப் பைகளில் வைக்கப்பட்ட நிலையில் கைப்பற்றப்பட்டுள்ளது.

இது தொடர்பில் சந்தேகநபர்கள் எவரும் கைது செய்யப்படவில்லை என்பதோடு, குறித்த கேரள கஞ்சா பொதிகள் யாழ், விசேட அதிரடைப் படை முகாமில் ஒப்படைக்கப்பட்டதைத் தொடர்ந்து அவை காங்கேசன்துறை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

Related posts