குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக திமுக சார்பில் கையெழுத்து இயக்கம்

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக திமுக மற்றும் அதன் தோழமை கட்சிகள் சார்பில், தமிழகம் முழுவதும் கையெழுத்து இயக்கம் நடைபெற்று வருகிறது.

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் மாணவர்கள், அரசியல் கட்சியினர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே இந்த போராட்டத்தின் போது டெல்லி மாணவர்கள் தாக்கப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக சார்பில் பேரணி நடத்தப்பட்டது. அதனை தொடர்ந்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தோழமை கட்சிகளுடன் இணைந்து நடத்திய கூட்டத்தில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக கையெழுத்து இயக்கம் நடத்தப்போவதாக அறிவித்தார்.

அதன்படி இன்று தொடங்கிய கையெழுத்து இயக்கம் வரும் 8 ஆம் தேதி வரை தமிழகத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் நடைபெற உள்ளது. இன்று காலை சென்னை கொளத்தூரில் இதனைத் தொடங்கி வைத்த மு.க.ஸ்டாலின், வீதி வீதியாகச் சென்று மக்களிடம் கையெழுத்து பெற்றார். இதே போல, திமுகவின் தோழமை கட்சித் தலைவர்களான கே.எஸ்.அழகிரி, வைகோ, கி.வீரமணி, திருமாவளவன் உள்ளிட்ட பலர் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இந்த இயக்கத்தை ஆரம்பித்தனர்.

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருக்கும் கடை வீதிகள், பேருந்து நிலையம் உள்ளிட்ட மக்கள் கூடும் இடங்களில் கையெழுத்து முகாம்கள் அமைக்கப்பட்டு, கையெழுத்து பெறப்பட்டு வருகிறது. பிப்ரவரி 8 ஆம் தேதி வரை கையெழுத்து பெறப்பட்டு அவை அனைத்தும் ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது.

Related posts