எதிர்க் கட்சித் தலைவர் பதவி சஜித் தகுதியை அடையவில்லை

சஜித் பிரேமதாச எதிர்க் கட்சித் தலைவர் பதவியை வகிப்பதற்கான தகுதியை இன்னும் அடையவில்லை என முன்னாள் அமைச்சர் ராஜித்த சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

தெரண தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகிய ´மொக்கத உனே´ என்ற நிகழ்சியில் பங்கேற்று வினவப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனை கூறினார்.

தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர் கட்சிக்குள் நிலவிய முரண்பாடு தோல்விக்கு காரணமாக அமைந்தாக குறிப்பிட்டார்.

ஊழல் மோசடிகளை விசாரணை செய்ய அமைக்கப்பட்ட நிறுவனங்கள் மேலும் அதிகமான ஊழல் குற்றச்சாட்டுகளை எதிர்நோக்கியதாகவும் அவர் தெரிவித்தார்.

ஜனாதிபதி தேர்தல் நடவடிக்கைகளில் முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க அதிக சிரத்தையுடனும் அர்ப்பணிப்புடனும் செயற்பட்டதாகவும் ஆகவே அவருக்கு எதிராக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகளில் எந்தவித உண்மை தன்மையும் இல்லை எனவும் அவர் கூறினார்.

எதிர்க் கட்சித் தலைவருக்கான தகுதி வெறுமனே பிரபல்யமடைந்திருப்பது மாத்திரம் அல்ல என தெரிவித்த அவர் மாறான சாணக்கியமாக செயற்படுவது முக்கியமானது எனவும் அவர் தெரிவித்தார்.

அத்துடன் எதிர்க் கட்சித் தலைவர் என்பவர் சர்வதேசத்துடன் நெருங்கி செயற்படக்கூடிய ஒருவராக இருக்க வேண்டியது கட்டாயம் எனவும் ராஜித்த சேனாரத்ன மேலும் கூறினார்.

ஆனால் சஜித் பிரேமதாச என்பவர் குறைந்தளவு அரசியல் அனுபவத்தை கொண்டவர் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமை பதவியில் இருந்து ரணில் விக்ரமசிங்க நீக்கப்பட்டால் அவரின் இடத்தை நிரப்புவதற்கு தகுதியான தலைவர் ஒருவரை தான் கட்சிக்குள் அடையாளம் காணவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

சஜித் பிரேமதாசவை ஜனாதிபதி வேட்பாளராக நியமித்த விடயத்தில் மற்றையவர்கள் அவசரபட்டு விட்டதாகவும் முன்னாள் அமைச்சர் ராஜித்த சேனாரத்ன மேலும் கூறியுள்ளார்.

Related posts