அஜித்தின் ‘நேர்கொண்ட பார்வை’

அஜித்தின் ‘நேர்கொண்ட பார்வை’ படத்தின் ‘வானில் இருள்’ என்ற பாடல் வரிகளின் வீடியோவை படக்குழுவினர் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டனர்.

அஜித்தின் 59-வது படமான ‘நேர்கொண்ட பார்வை’ படப்பிடிப்பு முடிந்துள்ளது. இந்தியில் அமிதாப்பச்சன் நடித்து வெற்றி பெற்ற ‘பிங்க்’ படத்தின் தமிழ் பதிப்பாக தயாராகி உள்ளது. கதாநாயகியாக வித்யாபாலன் வருகிறார். வினோத் இயக்கி உள்ளார். போனிகபூர் தயாரித்துள்ளார். இந்த படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியானது.

இதில் அஜித்குமார் வக்கீல் வேடத்தில் வந்து கோர்ட்டில் வாதாடும் காட்சிகள் இடம்பெற்று இருந்தன. படத்துக்கு அஜித் உள்ளிட்ட அனைத்து நடிகர்-நடிகைகளும் டப்பிங் பேசி முடித்துள்ளனர். பின்னணி இசை கோர்ப்பு பணியை தொடங்கி இருப்பதாக யுவன்சங்கர் ராஜா வலைத்தளத்தில் தெரிவித்து உள்ளார்.

இந்த நிலையில் படத்தில் இடம்பெறும் ‘வானில் இருள்’ என்ற பாடல் வரிகளின் வீடியோவை படக்குழுவினர் நேற்று சமூக வலைத்தளத்தில் வெளியிட்டனர். யுவன் சங்கர்ராஜா இசையில் உமாதேவி எழுதிய இந்த பாடலை தீ பாடி உள்ளார். பாடல் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. நேர்கொண்ட பார்வை படத்தை ஆகஸ்டு 10-ந் தேதி வெளியிட திட்டமிட்டனர். ஆனால் தெலுங்கில் பெரிய பட்ஜெட்டியில் தயாராகி உள்ள பிரபாஸ் நடித்த சாஹோ படம் ஆகஸ்டு 15-ந் தேதி தமிழ், தெலுங்கு மொழிகளில் வெளியாகிறது. இதே நாளில் சுதிப் நடித்த ‘பயில்வான்’ படத்தையும் இரு மொழிகளிலும் வெளியிடுகிறார்கள்.

எனவே ஆகஸ்டு 1-ந் தேதி நேர்கொண்ட பார்வை படத்தை திரைக்கு கொண்டுவருவது குறித்து படக்குழுவினர் ஆலோசித்து வருகிறார்கள்.

Related posts