இத்தாலியில் தீபிகா – ரன்வீர் சிங் திருமணம்

பாலிவுட் பிரபலங்களான தீபிகா படுகோன் – ரன்வீர் சிங் திருமணம் இத்தாலியில் இயற்கை எழில் சூழ்ந்த கோமோ ஏரி மாளிகையில் நேற்று சிறப்பாக நடைபெற்றது.

பிரபல இந்தி நடிகை தீபிகா படுகோனும் நடிகர் ரன்வீர் சிங்கும் கடந்த 6 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். எனினும் இதை வெளியே சொல்லாமல் தவிர்த்து வந்தனர். இந்நிலையில் கடந்த மாதம் தங்கள் காதலை உறுதி செய்தனர். மேலும் திருமண தேதியையும் அறிவித்தனர்.

இவர்களின் திருமணம் இத்தாலியில் பிரபல கோமோ ஏரியில் உள்ள மாளிகையில் 2 நாட்கள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இதையொட்டி கொங்கனி பாரம்பரியப்படி நேற்று காலை 7 மணிக்கு இவர்களின் திருமணம் நடைபெற்றது. இன்று சிந்தி முறைப்படி மீண்டும் திருமண நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

திருமணத்தில் இருவரது நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் சுமார் 40 பேர் மட்டுமே கலந்துகொண்டனர். வெளியாட்களை தடுப்பதற்காக மாளிகையில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. திருமணம் தொடர்பான படங்களை பகிர்ந்து கொள்ள விருந்தினர்களுக்கு தடை விதிக்கப்பட்டது. முன்னதாக இவர்களின் திருமண நிச்சயதார்த்தம் கடந்த 12-ம் தேதி நடைபெற்றது.

இத்தாலியில் ஆடம்பர திருமணத்தை தொடர்ந்து வரவேற்பு நிகழ்ச்சி பெங்களூருவில் வரும் 21-ம் தேதியும் மும்பையில் வரும் 28-ம் தேதியும் நடைபெற உள்ளது.

Related posts