ராஜபக்ஷர்களின் ஒத்துழைப்பு இல்லாமல் ஆட்சியமைக்க முடியாது

அறிவார்ந்தவர்கள் மக்கள் விடுதலை முன்னணிக்கு வாக்களிக்களிக்க மாட்டார்கள். மக்கள் விடுதலை முன்னணியின் உண்மை முகம் தற்போது அவர்களின் பேச்சிலேயே வெளிப்படுகிறது.

ராஜபக்ஷர்களின் ஒத்துழைப்பு இல்லாமல் எவருக்கும் ஆட்சியமைக்க முடியாது என பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்தார்.

பத்தரமுல்ல பகுதியில் உள்ள ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தலைமை காரியாலயத்தில் வெள்ளிக்கிழமை (10) இடம்பெற்ற தேர்தல் நடவடிக்கைகள் கண்காணிப்பு காரியாலய திறப்பு நிகழ்வில் கலந்துக் கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

ஜனாதிபதி தேர்தலுக்கான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளோம்.எமது வேட்பாளர் யார் என்பதை கட்சியின் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ நாட்டு மக்களுக்கு பகிரங்கப்படுத்துவார். சிறந்த வேட்பாளரை களமிறக்குவோம் என்ற உறுதியை நாட்டு மக்களுக்கு வழங்க முடியும்.

மக்கள் விடுதலை முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திஸாநாயக்க தேர்தலுக்கான அறிவிப்பு விடுக்கப்படுவதற்கு முன்னரே ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பதை அவர்கள் அறிவித்து விட்டார்கள்.

முன்னறிவிப்புக்களை விடுப்பதால் மாத்திரம் தேர்தலில் வெற்றிப் பெற முடியாது. அறிவார்ந்தவர்கள் மக்கள் விடுதலை முன்னணிக்க வாக்களிக்கமாட்டார்கள்.

வன்முறையான அரசியல் கலாசாரத்தில் இருந்து விடுப்பட்டு,ஜனநாயக அரசியலுக்கு பிரவேசித்துள்ளோம் என்று மக்கள் விடுதலை முன்னணியினர் குறிப்பிடுகிறார்கள்.

ஆனால் இவர்களின் உண்மை முகம் அவர்களின் பேச்சிலேயே வெளிப்படுகிறது. அழிப்பதும்,தீ வைப்பதும் மக்கள் விடுதலை முன்னணியின் அரசியல் கொள்கையாகும்.

2022 ஆம் ஆண்டு சம்பவத்தை தொடர்ந்து பொதுஜன பெரமுன பலவீனமடைந்து விட்டது என எதிர்தரப்பினர் கருதுகிறார்கள். அரசியல் களத்தில் பொதுஜன பெரமுனவுக்கு மக்கள் மத்தியில் செல்வாக்கு உள்ளது. ராஜபக்ஷர்களின் ஒத்துழைப்பு இல்லாமல் எவருக்கும் ஆட்சியமைக்க முடியாது என்றார்.

Related posts