‘நாய் சேகர்’ தலைப்பு யாருக்கு? – முடிவடையாத சர்ச்சை

நாய் சேகர்’ தலைப்பு யாருக்கு என்பதற்கான சர்ச்சை இன்னும் முடிவடையாமல் உள்ளது.
சுராஜ் இயக்கத்தில் சுந்தர்.சி நடிப்பில் வெளியான படம் ‘தலைநகரம்’. இதில் ‘நாய் சேகர்’ என்ற பெயரில் வடிவேலு செய்திருந்த காமெடி காட்சிகள் மிகவும் பிரபலம். இதையே தலைப்பாக வைத்து, வடிவேலு ரீ-என்ட்ரி படம் தயாராக இருந்தது. லைகா நிறுவனம் தயாரிப்பில், சுராஜ் இயக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டு முதற்கட்டப் பணிகளும் தொடங்கப்பட்டன. ஆனால், அந்தத் தலைப்பைப் பெறுவதில் சிக்கல் ஏற்பட்டது.
ஏஜிஎஸ் நிறுவனத்திடம் உரிமை
ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிப்பில், காமெடி நடிகர் சதீஷ் நாயகனாக நடிக்கப் புதிய படமொன்று தொடங்கப்பட்டது. அந்தப் படத்தில் சதீஷுடன் நாய் ஒன்றும் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளது. இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து, இறுதிக்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இந்தப் படத்துக்கு ‘நாய் சேகர்’ எனத் தலைப்பிட முடிவு செய்து விண்ணப்பித்தார்கள்.
ஆனால், இந்தத் தலைப்பை ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் பதிவு செய்து வைத்திருந்தது. உடனடியாக அந்த நிறுவனத்திடம் பேசி, தலைப்பின் உரிமை ஏஜிஎஸ் நிறுவனத்துக்கு மாற்றப்பட்டது. தற்போது சதீஷ் நடிப்பில் உருவாகியுள்ள படத்துக்கு ‘நாய் சேகர்’ எனத் தலைப்பு வைத்து ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் என அனைத்தும் தயாராகிவிட்டது.
வடிவேலு பேச்சுவார்த்தை மீண்டும் ரீ-என்ட்ரி கொடுப்பதால், ‘நாய் சேகர்’ தலைப்பு வேண்டும் என்று ஏஜிஎஸ் நிறுவனத்திடம் பேச்சுவார்த்தை நடத்தினார் வடிவேலு. ஏற்கெனவே ஏஜிஎஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் ‘தெனாலிராமன்’ என்னும் படத்தில் நடித்தார். இந்தப் பேச்சுவார்த்தை சுமுகமாக முடிவடையவில்லை. “தாங்கள் படத்தின் வசனமாக நிறைய இடங்களில் ‘நாய் சேகர்’ என்று பயன்படுத்திவிட்டோம். ஆகையால் படத்திற்கு அந்தத் தலைப்பே பொருத்தமாக இருக்கும். அப்படி மாற்றினால் மீண்டும் படப்பிடிப்பு நடத்த வேண்டியதிருக்கும். ஆகையால் தலைப்பைத் தரமுடியாது” என்று தெரிவித்துவிட்டது ஏஜிஎஸ் நிறுவனம்.
தொடரும் நெருக்கடி வடிவேலுவுக்காகப் பல்வேறு நடிகர்கள், சங்கங்கள் என அனைத்துமே ஏஜிஎஸ் நிறுவனத்திடம் பேச்சுவார்த்தை நடத்தின. ஆனால், தங்களுடைய நிலைமையை எடுத்துக் கூறி தலைப்பை விட்டுக் கொடுக்க மறுத்துவிட்டது ஏஜிஎஸ் நிறுவனம். இந்தச் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்க ஓரிரு நாட்களில் தயாராகவுள்ள ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரையும் வெளியிடத் திட்டமிட்டுள்ளது. தங்களுக்குத் தலைப்பு கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையில் வடிவேலு – சுராஜ் கூட்டணி ‘நாய் சேகர்’ என்றே பத்திரிகையாளர் சந்திப்பில் குறிப்பிட்டுப் பேசி வருகிறார்கள்.

Related posts