தமிழ் சினிமாவின் பிரபல இயக்குநர் திடீர் மரணம்

பசி’ படத்தின் இயக்குநர் துரை உடல்நலக் குறைவு காரணமாக இன்று காலமானார்.

இவருக்கு வயது 84. தமிழ்த் திரையுலகின் மூத்தக் கதாசிரியர், இயக்குநர், தயாரிப்பாளர் கலைமாமணி துரை, உடல்நலக் குறைவு காரணமாக காலமானதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

இவருக்கு மனைவியும் 2 மகன்களும் ஒரு மகளும் உள்ளனர்.

இயக்குநர் துரை தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் 46 படங்களை இயக்கியுள்ளார்.

இவர் இயக்கிய ‘பசி’ திரைப்படத்திற்கு 1979 -ம் ஆண்டுக்கான சிறந்த திரைப்படம் மற்றும் சிறந்த நடிகைக்கான தேசிய விருது கிடைத்தது. சென்னையின் கூவம் ஆற்றின் கரையோரம் வாழும் விளிம்பு நிலை மக்களின் வாழ்வியலை மையமாக கொண்டு இந்த படம் எடுக்கப்பட்டிருக்கும்.

சிறந்த இயக்குனர் , திரைப்படம், நடிகை என்று மூன்று தேசிய விருதுகளோடு மாநில அரசு விருதுகள், பிலிம்பேர் விருதுகள் என பல்வேறு விருதுகளை குவித்த எதார்த்த திரைப்படம்.

ஜெயபாரதி, கமல்ஹாசன் உள்ளிட்டோரும் இந்த திரைப்படத்தில் நடித்துள்ளனர்.

இயக்குநர் மட்டுமன்றி கதாசிரியர், தயாரிப்பாளர் என்ற பன்முகத் திறமை கொண்டவர் துரை. அவர் இயக்கிய அவளும் பெண்தானே, ஆசை 60 நாள், பாவத்தின் சம்பளம், ஒரு வீடு ஒரு உலகம், கிளிஞ்சல்கள் உள்ளிட்ட திரைப்படங்கள் மக்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றவைகளாகும்.

இயக்குநர் துரை மறைவிற்கு தமிழ் திரையுலகினர் தங்களது இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.

Related posts