பிச்சை எடுத்தே கோடீஸ்வரரான மும்பாய் நபர்

உலகின் மிகப் பெரிய கோடீஸ்வர பிச்சைக்காரராக அறியப்படும் மும்பையை சேர்ந்த பாரத் ஜெயின் என்பவர் 7.5 கோடி ரூபாய் ( 30 கோடி இலங்கை ரூபாய்) அளவிலான சொத்து மதிப்பு வைத்துள்ளதாக தெரியவந்துள்ளது.

பிச்சைக்காரர் என்றால் பொதுவாக வாழ்வாதாரத்திற்கே பொருட் இல்லாத நிலையில், கிழிந்த உடைகளை அணிந்து கையேந்தியபடி யாசகம் கேட்கும் மனிதர்கள் தான் எல்லோருடைய எண்ணங்களிலும் முதலில் எழுவார்கள்.

ஆனால் தற்போதைய காலகட்டத்தில் பிச்சையெடுப்பதையே இலாபகரமான தொழிலாக மாற்றி, பெரிய அளவிலான சொத்து மதிப்பை சேர்த்துள்ள நபர்களும் அறியப்படுகிறார்கள்.

அந்தவகையில் பிச்சையெடுத்தே கோடீஸ்வரராக மாறியுள்ள மும்பையைச் சேர்ந்த பாரத் ஜெயின் என்பவர், பிச்சையெடுப்பதின் அர்த்தத்தையே மாற்றி காமித்துள்ளார்.

எகனாமிக் டைம்ஸ் அறிக்கையின்படி, மும்பையைச் சேர்ந்த பாரத் ஜெயின் என்பவர் உலகளவில் பணக்கார பிச்சைக்காரராக அறியப்படுகிறார்.

மும்பை தெருக்களில் பிச்சை எடுத்து வரும் அவர், மனைவி, இரண்டு மகன்கள், சகோதரர் மற்றும் தந்தையை உள்ளடக்கிய குடும்பத்துடன் வசித்து வருகிறார். சிறுவயதில் ஏழ்மையால் பாதிக்கப்பட்டு முறையான கல்வியைத் தொடர முடியாமல் பிச்சையெடுக்க ஆரம்பித்த அவர், தற்போது தன்னை ஒரு கோடீஸ்வரராக மாற்றியுள்ளார்.

பிச்சை எடுப்பதன் மூலம் மாத வருமானமாக 60,000 இந்திய ரூபாய் முதல் 75,000 ரூபாய் வரை சம்பாதித்து வரும் பாரத் ஜெயின், 7.5 கோடி ரூபாய் மதிப்பளவில் சொத்து சேர்த்துள்ளதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றது. மேலும் அவர் மும்பையில் ரூ.1.2 கோடி மதிப்பிலான 2BHK பிளாட்டில் வசித்து வருவதாகவும், தானேயில் இரண்டு கடைகளை வைத்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.

கடைகளில் இருந்து மாதம் வாடகையாக 30,000 ரூபாய் பெறப்படுகிறதாம். மும்பையின் முக்கிய இடங்களான சத்ரபதி சிவாஜி மகாராஜ் டெர்மினஸ் ரயில் நிலையம் (CSMT) மற்றும் ஆசாத் மைதானத்தில் தான் பாரத் ஜெயின் பிச்சை எடுப்பதாக கூறப்படுகிறது.

2020 ஆம் ஆண்டில் அவரது மொத்த வருமானம் 9 லட்சமாக இருந்த நிலையில், தற்போது அவரின் மொத்த சொத்த மதிப்பு ரூ.7.5 கோடியை அடைந்துள்ளதாக தெரிகிறது. தினமும் ரூ. 2000 முதல் ரூ. 2,500 வரை யாசகம் பெற்றுவரும் பாரத், தன்னுடைய பிள்ளைகளை கான்வெண்டில் படிக்க வைத்து வருகிறார். அவரது குடும்பத்தினர் ஒரு ஸ்டேஸ்னரி கடையையும் நடத்தி வருகின்றனர். இவ்வளவு பணக்காரராக இருந்தும், அவருடைய குடும்பத்தினர் வேண்டாம் என்று கூறியும் பாரத் ஜெயின் இன்னும் பிச்சையெடுப்பதை தொடர்ந்து வருகிறார்.

பாரத் ஜெயின் மட்டுமல்ல இந்தியாவில் பல பேர் பிச்சையெடுப்பதை இலாபகரமான தொழிலாக மாற்றி கோடீஸ்வர பிச்சைக்காரர்களாக இருந்து வருகின்றனர். அந்த வகையில், கொல்கத்தாவைச் சேர்ந்த லட்சுமி என்பவர் தனது 16வது வயதிலிருந்து பிச்சை எடுப்பதை ஒரு வேலையை செய்து வருகிறார். அப்போதிலிருந்து பிச்சை எடுத்து லட்சக்கணக்கான ரூபாயை சேர்த்துள்ளார்.

அதேபோல் மும்பையின் சாலைகளில் பிச்சையெடுத்து வரும் கீதா சார்னி என்பவருக்கு சொந்தமாக ஒரு பிளாட் இருப்பதாகவும், அதில் தன் சகோதரனுடன் வசித்து வருவதாகவும் கூறப்படுகிறது. கீதா பிச்சை எடுத்து ஒரு நாளைக்கு சுமார் ரூ.1,500 சம்பாதிக்கிறார்.

Related posts