வருமானத்தை அதிகரிக்க ஜனாதிபதியின் யோசனை!

அடுத்த தசாப்தத்தில் இலங்கைக்கு பெருமளவு அந்நியச் செலாவணியை ஈட்டித்தரும் துறையாக சுற்றுலாத்துறை மாற்றப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

இலங்கையை கவர்ச்சிகரமான சுற்றுலாத் தலமாக மாற்ற, ஏற்கனவே திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, சுற்றுலாத்துறையை ஊக்குவிப்பதன் மூலம் தனிநபர் வருமானத்தை அதிகரிக்க முடியும் எனவும் தெரிவித்தார்.

கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நேற்று முன்தினம் (06) நடைபெற்ற இந்திய சுற்றுலா சம்மேளன நிகழ்வில் உரையாற்றும்போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.

எல்லைகளுக்கு அப்பால் பிம்ஸ்டெக் (BIMSTEC) வலயத்தை அபிவிருத்தியடைந்த சுற்றுலாப் பிரதேசமாக மேம்படுத்த, அனைத்து பிம்ஸ்டெக் நாடுகளும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டியதன் அவசியத்தையும் ஜனாதிபதி இங்கு வலியுறுத்தினார்.

இலங்கை சுற்றுலா ஊக்குவிப்பு பணியகத்தின் அழைப்பின் பேரில் இந்திய சுற்றுலா சம்மேளனம் ஏற்பாடு செய்துள்ள இந்த மாநாடு “எல்லைகளைக் கடந்து – வாழ்வை மாற்றும்” என்ற தொனிப்பொருளில் கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் ஜூலை 06 ஆம் திகதி முதல் 09 ஆம் திகதி வரை நடைபெறுகிறது.

இலங்கை பாதுகாப்பான மற்றும் கவர்ச்சிகரமான சுற்றுலாத் தளம் என்பதை உலகுக்கு அறிமுகப்படுத்த நடத்தப்படும் இந்த மாநாட்டில், இந்திய சுற்றுலாப் பயண முகவர் சம்மேளத்தைச் சேர்ந்த சுமார் 500 பேர் கலந்துகொண்டுள்ளன. இதில் செய்தி சேகரிப்பதற்காக சுமார் 50 இந்திய ஊடகவியலாளர்கள் வருகை தந்திருந்தமை விசேட அம்சமாகும்.

இந்த மாநாட்டில் உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க,

“இந்த மாநாட்டை இலங்கையில் நடத்துவதன் மூலம் திருமதி. ஜோதி எங்கள் மீது வைத்த நம்பிக்கைக்கு நன்றி கூற வேண்டும். புதிய திட்டங்களின் ஊடாக இலங்கையை மிகவும் கவர்ச்சிகரமான சுற்றுலாத் தலமாக மாற்றுறுவேன் என நான் உறுதியளிக்கிறேன். அதற்காக எமது சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ அர்ப்பணிப்புடன் செயற்படுகின்றார்.

இந்த மாநாட்டிற்குப் பின்னர், இங்கு வருகை தந்துள்ள பலர் இலங்கையின் பல்வேறு பகுதிகளுக்குச் செல்வார்கள். திருகோணமலை கோணேஸ்வர ஆலயத்தையும், கதிர்காமக் கந்தன் சன்னதியை தரிசிக்க தவறாமல் செல்ல வேண்டும் என நான் கேட்டுக்கொள்கிறேன்.

இந்த ஆலயம் 2000 ஆண்டுகளுக்கும் மேலான பழமையானது. வலயத்தில் மிகப் பழைமையான ஆலயமொன்றாகும். சில நாட்களுக்கு முன்னர் அங்கு சென்றிருந்தபோது பெருமளவிலான மக்கள் கூடியிருந்தனர். அத்துடன், யாழ்ப்பாணத்தில் நல்லூருக்கு சென்று வருடாந்த உற்சவத்தை கண்டுகளிக்கலாம். மலைகளையும் மற்ற அழகிய இடங்களையும் நீங்கள் பார்த்திருந்தாலும், நான் இங்கு சொன்ன இடங்களும் கட்டாயம் பார்க்க வேண்டிய இடங்களாகும். ஒகஸ்ட் மாதம் நல்லூர் திருவிழாவும் கண்டி பெரஹெராவும் நடைபெறுகின்றன. இது நமது கலாசாரத்தை உலகிற்கு எடுத்துரைக்கிறது. ஒரு சிறப்பு சுற்றுலா ஈர்ப்புள்ள தலமாக இது திகழ்கிறது. காலி இலக்கிய விழா ஜனவரி மாதம் நடைபெறுகின்றது. தென்மாகாணத்தின் காலியிலுள்ள ஒவ்வொரு நகரத்திலும் தனித்துவமான திருவிழாக்கள் உள்ளன. ஹிரிகெட்டிய கடற்கரையில் சுற்றுலா பயணிகளைக் கவரும் டிஸ்கோடெக் நவீன ஜாஸ் இசை என்பன பல இருக்கின்றன . மாத்தறையில் பல பாரம்பரிய இசைக் கச்சேரிகள் நடைபெறுவதுடன் ஜனவரி மாதம் கொழும்பில் ஆண்ட்ரியோ பொசெல்லியின் பாடலைக் கேட்கலாம்.

இலங்கை வங்குரோத்து நிலையில் இருந்து மீட்கும் வகையில் கடனை மறுசீரமைக்க வேண்டும். சுற்றுலாத்துறை என்பது கடன் அல்லாத நிதியை திரட்டுவதற்கான ஒரு வழியாகும். எனவே அதை முழுமையாகப் பயன்படுத்த வேண்டும். தற்போது இலங்கைக்கு வருடாந்தம் 2.5 மில்லியன் சுற்றுலாப் பயணிகள் வருகை தருகின்றனர். இதனை 5 மில்லியனாக உயர்த்துவதற்கான திட்டங்களை உருவாக்க வேண்டும். ஒரு சுற்றுலா பயணி ஒரு இரவுக்கு குறைந்தபட்சம் 1000 டொலர்களை செலவழிக்கும் ஒரு கவர்ச்சிகரமான திட்டத்தை உருவாக்க வேண்டும். தெற்காசிய நாடுகளில் மிகச்சிறிய மாலைத்தீவிலிருந்து சுற்றுலா பற்றி நாம் கற்றுக்கொள்ளக்கூடிய விடயங்கள் பல உள்ளன. நுவரெலியாவை கொல்ப் விளையாட்டின் மையமாக மாற்றுவதற்கு மேலும் 7 கொல்ப் மைதானங்களை அமைக்க திட்டமிட்டுள்ளோம். பெரிய சுற்றுலா விடுதிகளை உருவாக்க வேண்டும். தெதுவ பிரதேசத்தை அண்மித்து, நீர்த்தேக்கத்திற்கு அண்டிய 1000 ஏக்கருக்கும் அதிகமான பகுதி, சுற்றுச் சூழலுக்கு உகந்த சுற்றுலாத் துறைக்குப் பொருத்தமான பகுதியாக அடையாளம் கண்டுள்ளோம்.

ஹோடன் சமவெளிக்கு அருகில் மேலும் 900 ஏக்கர் உள்ளது. பசுமை சுற்றுலாத் துறையை மேம்படுத்துவதில் பங்களிப்பதன் மூலம் அங்கு சுற்றுலாப் பயணிகளின் வசதிகளை அதிகரிக்க எதிர்பார்க்கிறோம். மேலும் பல இடங்களில் துடுப்புப் படகு சவாரி சுற்றுலா பயணிகள் மத்தியில் பிரபலப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

அண்மையில் சென்று வந்த எல்ல பயணத்தின் அற்புதமான அனுபவத்தை உலகிற்கு எடுத்துச் செல்ல வேண்டும். அந்தப் பகுதியில் சுற்றுலாத் துறையை மேம்படுத்த இன்னும் பல விடயங்களை செய்ய வேண்டும்.

சுற்றுலாத் துறையை மேம்படுத்துவதுடன், அதன் வருமானத்தை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. இலங்கை அதன் தனித்துவமான உணவு மற்றும் கலாச்சார துறைகளுடன் ஒரு கவர்ச்சிகரமான சுற்றுலா தலமாக உலகிற்கு காண்பிக்க முடியும்.

கிழக்கு மாகாணத்தை சுற்றுலா நகரமாக அபிவிருத்தி செய்ய எதிர்பார்த்துள்ளோம். அங்கு அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றை வாங்க விரும்பினால் அதற்கான வசதிகளை செய்துதர தயாராக உள்ளோம். அதன்படி, கிழக்கு மாகாணத்தில் உள்ள கடற்கரையின் அழகை நீங்கள் அனுபவிக்க முடியும்.

இந்த சுற்றுலாத் திட்டங்களைச் செயல்படுத்தும் வகையில் சட்டங்களை மாற்றுவது அவசியம். சுற்றுலாத் துறை மூலம் அதிக வருமானம் பெறுவதன் மூலம் பெருமளவு அந்நியச் செலாவணியை ஈட்ட முடியும். சுற்றுலாத் துறை தொடர்பான இந்தத் திட்டங்கள் பத்தாண்டுகளுக்கு முன்பே தயாரிக்கப்பட்டிருக்க வேண்டும்.

அதேபோல் ஒரு வலயமாக சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் பற்றி ஆராய்கிறோம். கிழக்காசியாவிலும் தென்கிழக்காசியாவிலும் எமது வலயத்திற்கு எமது வலயத்தை விடவும் அதிகமாக சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர். அதனால் நாம் ஒன்றுபட்டு சுற்றுலாத்துறையை மேம்படுத்த தவறினால் முன்னேற்றத்தை அடைவது கடிமானமாகும்.

சுற்றுலாத் துறையினால் பெருமளவான அன்னியச் செலாவணியை ஈட்ட முடியும். சரியான திட்டமிடலுடன் சுற்றுலாத்துறையை ஊக்குவிப்பதன் மூலம் அடுத்த 10 வருடங்களில் தனிநபர் வருமானத்தை அதிகரிக்க முடியும். அதன் பின்னரான காலப்பகுதியில் சுற்றுச்சூழலுக்கு உகந்த வகையிலான சுற்றுலாத்துறையை மேம்படுத்த நாம் திட்டமிட்டுள்ளோம்.

எனவே, நாம் ஏன் முழு BIMSTEC வலய நாடுகளையும் எல்லை வரையறுக்கப்படாத சுற்றுலா வலயமாக மாற்றக்கூடாது? நான் இந்தியாவின் பல்வேறு பகுதிகளுக்குச் சென்றிருக்கிறேன். அனைத்து பகுதிகளிலும் 60-70 வகை பிரியாணி வகைகள் காணப்படுகின்றன.

நீங்கள் எமது மட்டக்களப்பு பிரதேசத்திற்கு சென்றால் தனித்துவமான சுவையில் பிரியாணியை ருசிக்கலாம். நாம் அதன் விற்பனையை ஏன் பிரசித்தப்படுத்தவில்லை? தாய்லாந்து மக்கள் தங்களது உணவு வகைகளை விற்பனை செய்யும் விதத்தை பாருங்கள். இந்தியாவில் கூட கிடைக்காத சிக்கன் டிக்கா மசாலா வகையை தாய்லாந்து சந்தைப்படுத்துகிறது. அதனால் ஒவ்வொரு பகுதியினதும் தனித்துவத்தை பிரதிபலிக்கும் பிரியாணி வகைகளை தயார் செய்ய வேண்டும்.

நாம் BIMSTEC வலயத்தை உருவாக்கியதன் நோக்கம் என்ன? . வங்காள விரிகுடாவை நாம் ஏன் கப்பல் பயணங்களுக்காக பயன்படுத்தாமல் இருக்கின்றோம்? கிழக்கு ஆசியா, இந்தியா, தென்கிழக்கு ஆசியா, மேற்கு ஆசியா, ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளில் இருந்து சுற்றுலா பயணிகள் வருகின்ற போது அவர்களுக்கு அவசியமான வசதிகளை ஏற்படுத்திக்கொடுக்க வேண்டியது அவசியமாகும். .

மகாபலிபுரம், ஒடிசா போன்ற இடங்களுக்கு ஐரோப்பியர்கள் மற்றும் பிற சுற்றுலாப் பயணிகள் அவசியம் செல்ல வேண்டும். கொக்ஸ் நகரை பார்வையிடவும், அந்தமான் தீவுகள் வழியாகச் செல்லவும் அவர்களுக்கு வாய்ப்பளிக்கப்பட வேண்டும். அந்தமான் தீவுகளில் தற்போதும் இந்தியர்கள் உள்ளனர். அத்தோடு மியன்மாரை பார்கின்ற போது அவர்களுக்கு சிங்கப்பூர் வரையில் கடல் வழிப் பயணத்தை மேற்கொள்ளும் வாய்ப்பு காணப்படுகின்றது.

எமது சுற்றுலாத்துறை மேம்பாட்டுத் திட்டங்களை தற்போது ஆரம்பிக்கும் பட்சத்தில் நாம் 10 வருடங்களுக்குள் அபிவிருத்தி அடைந்த சுற்றுலாத்துறைக்கு சொந்தக்காரர்கள் ஆக முடியும்.

சுற்றுலாத்துறைக்கான சரியான திட்டங்கள் ஏன் நம்மிடம் இல்லை? லும்பினியை சென்றடைவோர், அடுத்தாக விமானம் மூலம் புத்தகயாவிற்கு அழைத்துச் செல்லப்படுகின்றனர். அதன் பின்னர் கொழும்பிற்கு அழைத்துவரப்பட வேண்டும். அதனால் தலதா மாளிகாவை தரிசிக்கும் வாய்ப்பும் கிட்டும். அவ்வாறான திட்டங்களை நாம் வகுக்க வேண்டும். ஒவ்வொரு ஆண்டும் இலட்சக்கணக்கான சுற்றுலாப் பயணிகளை எமது வலயத்திங்குள் கொண்டு வருவதற்கான திட்டங்களை உருவாக்க வேண்டும். அதன்படி, பிம்ஸ்டெக் பகுதி ஒரு பெரிய சுற்றுலாப் பகுதியாக மாற்றமடையும்.

கிரிக்கெட் விளையாட்டில் கவனம் செலுத்தும் போது, இந்தியா இப்போது முன்னணியில் உள்ளது. கிரிக்கெட்டில் இவ்வளவு வெற்றிகளைப் பெற்றுள்ள நாம் ஒன்றிணைந்து செயற்பட்டால் சுற்றுலாத்துறையிலும் ஏராளமான வெற்றிகளைப் பெறலாம். எனவே நாம் அனைவரும் ஒன்றிணைந்து எமது பிரதேசத்தை சுற்றுலாப் பிரதேசமாக மேம்படுத்தி மக்களின் வாழ்வாதாரத்தை வளப்படுத்த அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும்.” என ஜனாதிபதி கேட்டுக்கொண்டார்.

இந்த மாநாட்டில் உரையாற்றிய, இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே,
“இந்த மாநாட்டிற்கு இலங்கை ஜனாதிபதி வருகை தந்ததை மிகவும் பாராட்டுகின்றேன். கடந்த வார இறுதியில், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, இலங்கையின் மிக அழகான சில பகுதிகள் வழியாக மறக்க முடியாத ரயில் பயணத்தை ஏற்பாடு செய்திருந்தார். அதில் நான் உட்பட ஒரு குழுவினர் கலந்துகொண்டோம்.

இலங்கையின் மூடுபனியுடன் கூடிய காடுகள், மலைநாடு, அழகிய நிலப்பரப்புகளின் ஊடாக அழகிய பயணத்தை நினைவுபடுத்துவதற்காக மட்டும் நான் இதனைக் குறிப்பிடவில்லை. அங்கே எனக்கு இரண்டு விடயங்கள் நினைவுக்கு வந்தது. அவற்றில் ஒன்று, இந்தியாவில் இருந்து வருகை தந்து, இங்கு இருப்பவர்களுக்கு நன்கு தெரிந்த பகுதிகள்.

இது, வசூரி மற்றும் நீலகிரி பகுதிகளுக்கான பாதையை நினைவுபடுத்துகிறது. வசூரி போன்ற வெப்பநிலை உள்ள இப்பகுதியில் அமைந்துள்ள இந்த ரயில் பயணத்தில் இருபுறமும் தேயிலை தோட்டங்கள் இருப்பதால், நீலகிரி நோக்கி பயணிப்பதை இந்திய மக்களுக்கு இது நினைவூட்டுகிறது.

அந்த ரயில் பயணத்தில் உலகப் புகழ் பெற்ற ஒன்பது வளைவுப் பாலம், புகழ்பெற்ற எல்ல ஆகிய இடங்களை அடைந்தபோது, என் கண்களையே என்னால் நம்ப முடியவில்லை. இப்பகுதி, சுற்றுலா பயணிகளின் சொர்க்கபுரியாக மாறியுள்ளது. அந்த அளவுக்கு ரம்மியமாக இருக்கிறது. இந்தியா, இலங்கை மற்றும் பிற நாடுகளில் இருந்து சுற்றுலா பயணிகள் அங்கு வருகை தந்திருந்தனர்.

ஜனாதிபதி அவர்களே, நீங்கள் இங்கு வருகை தந்திருப்பதை இந்தியா மற்றும் இலங்கை மக்களின் சுபீட்சத்துக்கான நெருக்கமான மற்றும் ஒத்துழைப்பு நடவடிக்கையாக நான் பார்க்கிறேன்.

இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான உறவு வலுவான சகோதர உறவு. இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான புவியியல் நெருக்கம் பற்றி நாம் அனைவரும் அறிவோம். இரு நாடுகளுக்கும் இடையே பல ஆயிரம் ஆண்டுகளாக நிலவும் இந்த புவியியல் நெருக்கம், வரலாறு, கலாசாரம், நாகரிகம், மதங்கள், மொழிகள், இசை, சினிமா, கிரிக்கெட் விளையாட்டு, ஜனநாயகம், பன்முகத்தன்மை, மரியாதை மற்றும் அமைதி ஆகியவற்றுக்கு சான்று பகர்கின்றது. இந்த மாநாட்டை நடாத்துவதற்கு ஆதரவு வழங்கிய சுற்றுலாத்துறை அமைச்சருக்கும் அதற்கு தலைமை தாங்கிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் எனது விசேட நன்றிகளை தெரிவித்துக் கொள்ள வேண்டும்.

கடந்த சில மாதங்களாக வாரத்திற்கு நான்கு முறை இயக்கப்பட்ட சென்னை-யாழ்ப்பாண விமான சேவையை மீண்டும் ஆரம்பிப்பது மட்டுமன்றி, இந்த விமான சேவையை ஜூலை 16 ஆம் திகதி முதல் நாள் தோறும் இயக்க எமக்கு முடிந்தது. இரு நாடுகளுக்கு இடையே பல தசாப்தங்களாக இயங்காமல் இருந்த படகு சேவையை மீண்டும் ஆரம்பிக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். இந்தியாவில் இருந்து இலங்கைக்கு வருகை தரும் சர்வதேச கப்பல் தொடர்பான யோசனை தொடர்ந்தும் வெறும் யோசனையாக மாத்திரம் இருக்காது என்றே கூற வேண்டும்.

இந்திய சுற்றுலாப் பயணிகள் இலங்கையில் பணம் செலுத்துவதற்கு தங்கள் சொந்த நாணயத்தைப் பயன்படுத்த முடியும் என்பதால், இலங்கையில் இந்திய நாணயத்தைப் பயன்படுத்துவது சுற்றுலாவுக்கு ஊக்கமளிக்கிறது. இரு நாடுகளுக்கு இடையே டிஜிட்டல் கொடுப்பனவுகளை செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதோடு, எல்லைகளைத் தாண்டி வாழ்க்கையை மாற்றுவது மட்டுமன்றி, நமது பொதுவான பாரம்பரியத்தை கட்டியெழுப்பவும் காரணமாக அமையும்.“ என்று இலங்கைக்கான இந்தியத் தூதுவர் தெரிவித்தார்.

துறைமுகங்கள், கப்பல்துறை, விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா, சுற்றுலா மற்றும் காணி அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ, இந்திய சுற்றுலா முகவர் சங்கத்தின் தலைவர் ஜோதி மாயல் உள்ளிட்ட பலர் இந்த மாநாட்டில் கலந்துகொண்டனர்.

Related posts